சனி, 9 மே, 2020

கேள்வி :..ஷிவ் நாடார் எதற்காக தமிழ்நாட்டில் வித்யஞான் போன்ற பள்ளியை ஆரம்பிக்கவில்லை?

என் பதில் :..

பயந்திருப்பாரோ? தூத்துக்குடி பக்கம் கேட்டால் சரியாக பதில் சொல்லுவார்கள். ஏம்லே, மக்கா?


இந்தியாவின் முதன்மை பத்து நிறுவனங்களில் ஒன்று ஹெசில் (HCL). போர்ப்ஸ் கம்பெனி பட்டியலில் இடம் பெற்ற இந்திய நிறுவனம்.

ஹெசில் குழுமத்தின் அதிபர் திரு.சிவநாடார்.


சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே மூலைப்பொழி கிராமம். தந்தை பெயர் சிவசுப்பிரமணிய நாடார்.


இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு.சி.பா ஆதித்தனார். திரு.சிவந்தி ஆதித்தன், எழுத்தாளர் ரமணி சந்திரன், திரு சிவநாடார் இவர்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்கள்.


தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், கல்லூரி படிப்பை 'தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட்' மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், தனது பொறியியல் படிப்பை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியிலும் முடித்தார்.


பள்ளியிலேயே இந்தி பயின்றார். அதன் பலனை பல பேட்டிகளில், பலமுறை சொல்லியிருக்கிறார்.


பின்னர் வட நாடு சென்றார். தொழில் தொடங்கினார். வெற்றி பெற்றார்.

சிவ நாடார், சிவ் நாடார் ஆனார்.

இன்று உலகின் 66வது பெரும் பணக்காரர், இந்தியாவில் நாலாவது.
நாட்டின் உயரிய பத்மபூஷன் விருது பெற்றவர்.

இவர் வளர்ச்சியின் அடித்தளம்: 1. கற்ற கல்வி, 2. வடநாட்டில் தொழில் முனைந்தது், 3. ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

1976ஆம் ஆண்டு தனது நண்பர்களோடு இணைந்து மைக்ரோகம்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

1977ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனதா கட்சி அரசு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றியது. தொழித்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

இது சரிப்பட்டு வராது என்று கோகோ கோலா, ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விட முடிவு செய்தன.

நாமெல்லாம் கோலாவிற்கு பதில் அறிமுகமான 'டபுள் செவென்' குளிர்பானம் குடித்து கொண்டாடிய போது, சிவநாடார் மட்டும் நாட்டை விட்டு வெளியேறும் ஐ.பி.எம் கணனிக்கு சரியான பதில் தன்னிடத்தில் இருக்கிறதென்று நம்பினார்.


உலகின் எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்தார் -இது 1977 ல்!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனம் அப்படித்தான் சுமார் இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் 500 கணனிகள் இந்திய சந்தைக்கு வருவதற்கு முன்னாலேயே ஹெசிஎல் கணினி வந்துவிட்டது.

எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையான கணினிகளில் பெரும்பகுதி ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

1985–1990 ல் எங்கள் வங்கியில் HCL கம்ப்யூட்டர்களில் சும்மா பட்டையை உரித்திருக்கிறோம். 286 DX2 ! முழு மெக்கானிக்கல் கீபோர்டு. விரலோடு பேசும்.


மென்பொருள்துறை, கணினி துறையில் பெரும் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை கணித்து, அதற்கான பணியாட்களை உருவாக்க சிவநாடார் தன் நண்பர்களோடு இணைத்து NIIT என்ற பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கினார்.


சிவ நாடார் உயர் கல்வியின் உன்னத தயாரிப்பு.

அவர் உணர்ச்சிவசமான, அமைதி விரும்பாத ஒரு தொழில் முனைவாளர். சொந்த மாவட்டம் தூத்துக்குடியின் விறுவிறு இரத்தம் பாயும் துடிப்பாளர்.


மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம் கல்வியால் ஐம்பதே வருடங்களில் தன்னை முழுவதுமாக மறு கட்டமைத்த வரலாறில் இவரது அத்தியாயம் பிரமிக்க வைக்கும் ஒன்று.


வாழ்வின் உன்னதத்தை அடைந்த போது நின்று யோசித்தார். தன்னை உயர்த்திய கல்விக்கு சிறப்பு செய்ய தீர்மானித்தார். தனது சொத்தில் பெரும்பகுதியை கல்விக்கு கொடையளித்து வருகிறார்.


அவரது ஆதர்ஷ கல்வி நிறுவனம் சென்னையில் உள்ள எஸ். எஸ்.என் பொறியியல் கல்லூரி. நாட்டின் தரமான கல்லூரிகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது.


அவரது மகள் ரோஷ்னி, எச்.சி.எல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக வருவதற்கு முன்பு, ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியி்ன் அறக்கட்டளை அமைப்பான சிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக சென்னையில் பணியாற்றி வந்தார்.


சில வருடங்களுக்கு முன்னால் இந்த கல்லூரியின் வங்கி கணக்கு சம்பந்தமாக ஒரு சந்தேகம் தீர்த்து வைக்க சென்னை அலுவலகம் போயிருந்தோம்.


ஒரு மாநில அமைச்சர் சேர்க்கைக்கு அனுப்பிய பரிந்துரை, நிமிடத்தில் சீராய்வு செய்யப்பட்டு, வினாடிகளில் நாட் செலெக்ட் கோப்புக்கு போனது!


அண்ணா பல்கலைக்கு கொடுத்த சீட்கள் போக, கல்லூரியின் அனைத்து படிப்புகளிலும் சேர்க்கை தகுதி அடிப்படையில் செய்யப்படுகிறது.


ஒரு வருடத்தின் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி சேர்க்கையின் ட்ரெண்ட், இந்த எஸ்எஸ்என் கல்லூரியில் நிர்ணயிக்கப்படுகிறது.


தொட முடியாத தூரம் போய்விட்டார் சிவநாடார். தொட்டால் 'பொட்டியை ராவி' விடுவார்கள்.


பெரும் தொழிலதிபர்கள் நெளிவு சுழிவோடுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களது வேர்கள் மாநிலங்களையும், நாடுகளையும், ஏன் கண்டங்களையும் தாண்டியது.


அரசியல்வாதிகளுக்கு பல தொழில்கள் தெரியும்.


தொழிலதிபர்களுக்கு பல அரசியல் வழிகள் தெரியும்.


ஒரு உதாரணம். அவரது முகவரி உத்திரபிரதேசம் நொய்டாவில். அவரது SSN இணைய தளத்தின் முதல்வரி இன்றைக்கும் ஜவஹர்லால் நேருவை புகழ்கிறது!


தான் நிறுவிய சிவநாடார் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கான இரண்டு வித்யஞான் இலவசப் பள்ளிகள், அறக்கட்டளை மானியத்தில் இயங்கும் மூன்று பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வருகிறார்.


ஏன் உத்திரபிரதேசம் என்றால் நாற்பதாண்டுகளாக அவர் தனது பெரும்பாலான தொழிற்ச்சாலைகளை நடத்தி வருவது உத்திரபிரதேசம் நொய்டாவில். அவர் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் அங்கே இருக்கின்றன.


தமிழக அரசு தற்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக் கழகத்தைத் தொடங்க சிவநாடாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.


'கட்டணம்' எதுவும் கிடையாது என்று சொல்லுகிறார்கள். (கல்லூரியில் ஐயன்மீர்)


சிவநாடாரின் குழுமம் பங்கெடுத்துள்ள தொழில்களின், சந்தைகளின் பட்டியல் டாடா குழுமத்திற்கு நிகரானது.


விண்வெளி, பாதுகாப்பு, வாகன, வங்கி, மூலதன சந்தைகள், ரசாயன மற்றும் செயல்முறை தொழில்கள், எரிசக்தி, சுகாதாரம், தொழில்துறை உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், காப்பீடு, உற்பத்தி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், இயற்கை வளங்கள், எண்ணெய், எரிவாயு, சில்லறை விற்பனை, தொலைத் தொடர்பு, விருந்தோம்பல் மற்றும் பயணம், போக்குவரத்து - பெரிய பட்டியல்.


அவர் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர். நிகர மதிப்பு ரூ. 1,11,000 கோடி.


ஒருவேளை இதைக்கூட நீங்களும் நானும் சம்பாதிக்க முடியும்.


ஆனால் சிவநாடார் ஒரு பரோபகாரி (philantherpist).


தனது செல்வத்தில் 10 சதவீதம் தனது மனிதநேய முயற்சிகளுக்காக ஒதுக்கி செலவழிக்கிறார்.


ஐந்தாண்டுகளுக்கான அவரது பட்ஜெட் ரூ. 4,000 கோடி. அதற்காக டாஸ்மாக் கிரிமினல் திட்டங்களை வகுக்காமல், சமீபத்தில் அவர் எச்.சி.எல்-யில் தனது 2.5 சதவீத பங்குகளை விற்று ரூ. 585 கோடி ரூபாய் தனது பரோபகார திட்டங்களுக்கு செலவழித்தார்.


விப்ரோ பிரேம்ஜி, சிவ நாடார், ரத்தன் டாடா இவர்களெல்லாம் தொழிலில் மட்டுமல்ல, பரோபகாரத்திலும் போட்டி போடுகிறார்கள்.


வசதியான குடும்பத்தில் பிறந்தவரானாலும் இத்தனையையும் வடிவமைத்தது சிவநாடார் தனது சொந்த முயற்சியில்.


அவரது 75 வயது உடம்பில் சொந்த ஊரின் இரத்தம் இன்னும் விறுவிறு வேகத்துடன் ஓடி கொண்டுதான் இருக்கும்.


திருச்செந்தூர் தேரி காட்டின் மணல் போல அதன் வண்ணம் தனியொரு சிவப்பு.


தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை புரிந்த ஞான சிறப்பு.

நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக