வியாழன், 17 அக்டோபர், 2019

அறிவு பெரிதா? அரசியல் பெரிதா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வித்துறையில் இருக்கும் அமைச்சர்கள், மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்  தான் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பதக்கப் பட்டியலில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பட்டச் சான்றிதழ்களையும் அவர்கள் கையால் வழங்குகின்றார்கள்?  ஏற்புடையதா?

இரவு பகல் கண் விழித்து, பாடங்களோடு உருண்டு புரண்டு, ஆசிரியர்களை கவனித்து, அனுசரித்து, கல்விக்கூடங்கள் அறிவுறுத்தும் ஒழுக்க விதிகளை நம்பி, அதனை கடைபிடித்து, கடன் வாங்கி, சேமிப்பு பணத்தை எடுத்து, தண்ணீர் போல பணத்தை செலவளித்து நாம் படித்து முடிக்க வேண்டும். பட்டம் வாங்க வேண்டும். அது நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்தும் என்ற நம்பிக்கையை கைவிடாமல் இருக்க வேண்டும்.

கல்லூரியில் கடைசி வருடத்தில் கண் துடைப்பாக நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வ்யூ உண்மை தான் என்று நம்ப வேண்டும். நேர்முகத் தேர்வு நடத்தும் நிறுவனங்கள் உண்மை தான் நம்பித்தான் ஆக வேண்டும். நம் திறமைகளை புடம் போட்டுப் பார்ப்பார்கள். தேறாவிட்டால் குடும்பத்தினர் அடையும் கவலைகளை விட நம் மேல் நமக்கு உருவாகும் கழிவிரக்கத்தை கடந்து வந்து நிற்க வேண்டும். மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்லாமல் சொல்லும் பட்டமளிப்பு விழா மிக முக்கியம். ஆனால் நம் எதிர்கால வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஆதார காரணமாக உள்ள கல்லூரி வழங்கும் பட்டங்களை கொடுக்க வரும் நபர்களைப் பற்றி அவர்களின் தகுதிகளைப் பற்றி, அவர்களின் கடந்த கால செயல்பாடுகளைப் பற்றி, அவர்களின் நிகழ்கால அயோக்கியத்தனங்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் மேடையில் ஏறி பட்டத்தை வாங்கும் போது எடுக்கப்படும் புகைப்படத்திற்கு விரும்பாவிட்டாலும் புன்னகை பூக்க வேண்டும்.

காலம் முழுக்க இந்த நபர்களும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். என் தலைமுறைக்கும் இவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும்? முழுமையாக சொல்லவும் முடியாது. ஆனால் இவர்கள் என்னுடன் என் வாழ்க்கை முழுக்க வந்து கொண்டேயிருப்பார்கள்.

நான் வாங்கும் அந்த பட்டத்திற்கு என்ன மதிப்பு?

என்னை ஒழுக்கமாக வாழ்ந்தால் தான் உயர்வுண்டு என்று போதித்த பாடங்களுக்கு என்ன மரியாதை?

திருடினால் நிச்சயம் தண்டனை உண்டு என்ற சொல்லும் சட்டங்கள் என்பது மட்டும் எப்படி அரசியலில் மட்டும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது?

வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். மனிதர்களுக்கு அல்ல என்ற போதனைகளை இன்னும் எத்தனை நாளுக்கு நான் நம்பித் தொலைக்க வேண்டும்?

வள்ளுவர் சொன்ன ஒழுக்கம் என்றால் என்ன?
சமூகம் சொல்லும் தகுதி என்றால் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக