சனி, 14 செப்டம்பர், 2019

அறிவு பொக்கிஷம் "அறிஞர் அண்ணா"(நெஞ்சம் மறப்பதில்லை)
(புதுவை வேலு.............)

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்னும்  இறை கோட்பாட்டையும்,

"கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்னும் வாழ்வியல் கோட்பாட்டையும்
உலகுக்கு உவந்தளித்த உதய சூரியனுக்கு, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இன்று வயது 106.( அண்ணாத்துரை பிறந்த தினம்: 15-9-1909)

தமிழர்களின் நெஞ்சங்களில் மஞ்சமிட்டு, புகழால் உயிர் வாழும் உன்னதத் தலைவர்.அறிஞர் அண்ணா என்று சொன்னால்  அது மிகையாகாது. தமிழுக்கு அவர் ஆற்றிய அருஞ்சிறப்புகளை  இன்று  நினைவு கூறுவதை தமிழர்களாகிய நமது" நெஞ்சம் மறப்பதில்லை"

அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909-ல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்தார்.

மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.

1934-ல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால்.... ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது.
 ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.

பெரியாரின் பாசறையில்…
இளைஞர் அண்ணா, பெரியாருடன் ஏன் இணைந்தார் என்பதற்கு அவரது பதில்: “பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள்தான் எனக்கு மிகவும் பிடித்தன.
 கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் அவரிடத்தில்தான் நான் சிக்கிக்கொண்டேன். அன்று முதல் அவர்தான் என் தலைவர்.” திராவிடர் கழகத்திலிருந்து 1949-ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா தொடர்ந்து போற்றிவந்தார்.

 1967-ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
1967 பிப்ரவரியில் சென்னை மாநில முதல் அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

தொலைநோக்குப் பார்வை

1960-ம் ஆண்டில் ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டில், ‘குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் நிதியாவது சென்னை மாநிலத்துக்கு ஒதுக்குக’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்…
சமமான வளர்ச்சி, பணவீக்கத்தையும், பற்றாக்குறை நிதியாக்கத்தையும் சீர்செய்தல், மாநிலத்தின் தொழில் வளங்களை வளர்த்தெடுத்தல், வேளாண் துறையின் சிக்கல்களை நீக்குதல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுதல், தூத்துக்குடி துறைமுகத்தைப் பெரிய துறைமுகமாக மாற்றுதல், கடலோரப் பகுதிகளில் கப்பல் தொழில்களைக் கட்டமைத்தல், சூரிய சக்தியைப் பயன்படுத்தல், நிலச் சீரமைப்புக்கும், சாலை அமைப்பதற் கும் பெரும் மக்கள் படையை உருவாக்குதல், சென்னை நகர வளர்ச்சிக்காகப் பெருநகர் திட்டத்தை உருவாக்குதல் ஆகியன அண்ணா முன்மொழிந்த முன்னோடித் திட்டங்களாகும்.
 இந்தக் கட்டுரையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘அனைவரையும் உள்ளடக்கும் திட்டம்’(இன்க்ளூசிவ் பிளான்) என்கிற புதிய கருத்தை முன்மொழிந்தார்.
11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-12) ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’(இன்க்ளூசிவ் குரோத்) என்ற கருத்துருவை இந்தியாவில் நடுவண் அரசு வலியுறுத்தியது. ஆழமான பொருளியல் சிந்தனையைத் தொலைநோக்குப் பார்வையோடு அண்ணா 1960-ம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அண்ணாவின் படைப்புகள்:
1939 –கோமளத்தின்கோபம்
1942 –களிங்கரணி
1943 –பார்வதி-B.A
1943–சந்ரோதயம்
194-சிவாஜிகண்டஇந்துசாம்ராஜ்யம்
1946–வேலைக்காரி -
1946–குமரிகோட்டம்
1948–நல்லதம்பி
1948–ஓர்இரவு
1953–சொர்கவாசல்
1955–சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்

குறிப்பிடத்தக்க படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1982 – நீதிதேவன் மயக்கம்

காலவரிசை:
1909  – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்
1930  – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.
1934  – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1935  – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938  – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
1944  – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
1948–அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி”  திரையிடப்பட்டது.
1949  – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.
1962  – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1967  – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968  – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.
1969  – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.
1969–பிப்ரவரி3ம்தேதிதன்னுடைய   59 வது வயதில்சென்னையில்காலமானார்.
1972–அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.
1978  – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.
1987  – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.
2010-அண்ணாநூற்றாண்டுநூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.
அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்”  என பெயரிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. 

சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை”  என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு  சென்னையில்  நிறுவப்பட்டது.

அறிஞர் அண்ணா 1931 தொடங்கி 1969 பிப்ரவரி வரை தனது நிகரற்ற உரைகளில், எழுத்துகளில் பொதுவுடைமை, பகுத்தறிவு, இடஒதுக்கீடு போன்ற மானுட வளர்ச்சிக்கான அடிப்படைக் கூறுகளைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
 சீரான சிந்தனை, செறிவான சமூக நோக்கு, அதிகாரக் குவியல்மிக்க டெல்லிக்கு அடிபணிந்து போகாத ஆட்சிமுறை ஆகியவற்றை முன்னிறுத்தித் தமிழ்நாட்டுக்குச் சரியான தடம் அமைத்துக் கொடுத்தார்.
தன்னைக் கடுமையான முறையில் யார் பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் கொள்கை சார்ந்த நெறிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதுதான் அவருக்கு வெற்றியை வழங்கியது.

தமிழன்னைக்கு சிறப்பு சேர்த்த  தமிழ்க் குடிமகன்  அறிஞர்அண்ணா அவர்கள் இன்று நம்மிடையே இல்லையாயினும்,அவரின் புகழ் அணயா விளக்காய்  தமிழர்களின் நெஞ்சங்களில் ஒளி விளக்காய் திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக