செவ்வாய், 2 ஜனவரி, 2018

தங்கமான தங்க பாப்பாவிற்கு ..இந்த பதிவு ...கணிதம் ...

சத்யேந்திரநாத் போஸ் வங்கத்தில் பிறந்த ஒரு கணிதவியல், இயற்பியல் விஞ்ஞானி. கொல்கத்தாவில் படிப்பை முடித்துவிட்டு, தன் 22வது வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். (புகழ் பெற்ற ஜெகதீஷ் சந்திர போஸ் இவரது ஆசிரியர்).
பின்னர் டாக்கா பல்கலைக் கழகத்தில் ரீடராகச் சேர்ந்தார். இவரது வகுப்புத் தோழரும் சகவிஞ்ஞானியு மான மெக்னாட் சாஹாவுடன் இணைந்து சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.
சத்யேந்திரநாத் போஸ்...1894 ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி 1974 (80 ஆண்டுகள்)
மாக்ஸ் பிளாங்க்கின் குவாண்டம் பிசிக்ஸ் கோட்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து ஓர் ஆய்வுத்தாளை லண்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார் சத்யேந்திரநாத் போஸ். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை. தன் ஆராய்ச்சி முடிவு சரியானதே என்பதில் உறுதியாக இருந்த போஸ், தன் ஆய்வுத் தாளை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி அவரது கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் முக்கியத்துவத்தை உடனடியாக உணர்ந்து கொண்ட ஐன்ஸ்டீன் அதை ஜெர்மன் மொழியில் தானே மொழியாக்கம் செய்து ஒரு புகழ்பெற்ற ஜெர்மானிய இதழுக்கு அனுப்பினார். போஸின் கட்டுரை அந்த இதழில் வெளியானது. அவருக்கு அயல்நாட்டு விஞ்ஞானிகளின் அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைத்தன.
தன்னுடன் வந்து பணியாற்றுமாறு போஸை அழைத்தார் ஐன்ஸ்டீன். அவர்கள் இருவரது உழைப்பில் உருவானது தான் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் கொள்கை. மின்காந்தக் கதிர் வீச்சின் சிப்பங்கள் புள்ளியியலின்படி எப்படி நடந்துகொள்ளும் என்பதே போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் கொள்கை. இவர்களது கோட்பாட்டிற்கு லூயி டி பிராலி, எர்வின் ஷ்ரோ டிங்கர், பால் டிராக், ஹைசன்பர்க் போன்ற பிரபல விஞ்ஞானிகளின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைத்தன. போஸைக் கவுரவிப்பதற்காகபோஸ் புள்ளியியலின்படி நடந்துகொள்ளும் துகள்களுக்கு `போஸான்’ என்று பெயரிட்டார் பால் டிராக். நம் இந்திய நாட்டு விஞ்ஞானி ஒருவரின் பெயரால்தான் போஸான் துகளுக்கு அந்தப் பெயர் கிடைத்தது என்பது நம் நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்...என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்..!
போஸ் ஆராய்ச்சியில் மட்டுமல்ல, இசையிலும் நாட்டம் உடையவராக இருந்தார். வயலின் போன்ற ஒரு இசைக் கருவியை அவருக்கு இசைக்கத் தெரியும். சத்யேந்திரநாத் போஸுக்கு 1954-ம் ஆண்டு பத்மபூஷண் விருது கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவரை நாடு மறந்துவிட்டது. ஜே.சி. போஸ், பிசி. ரே, எம். சாஹா, சி.வி. ராமன் போன்ற இந்திய விஞ்ஞானிகள் இங்குள்ள குறைபாடுகளையும் சூழலையும் தாண்டி அறிவியல் துறையில் சாதனைகள் நிகழ்த்திக் காட்டினர். அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்தியாவில் அவர்களைப் போதுமான அளவு நாம் கொண்டாடி மகிழவில்லை. கிரிக்கெட் வீரர்களையும் சினிமா நடிகர்களையும் அவர்களது சாதனைகளுக்காகக்கொண்டாடுகிறோம். அதில் தவறு இல்லை. அதே சமயம், அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய நம் நாட்டு விஞ்ஞானிகளை உரிய முறையில் கவுரவிக்க, கொண்டாட ஏன் தவறுகிறோம் எனப்து வியப்பு.!
பிப்ரவரி 28 தினத்தை சர் சி.வி. ராமன் நினைவாக தேசிய அறிவியல் நாளாக அனுசரிக்கிறோம். சத்யேந்திரநாத் போஸ் பிறந்த ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக‌ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஜனவர் 1ம் நாளை தேசிய விஞ்ஞானிகளின் நாளாகவும் மத்திய அரசு அறிவிக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
இன்று அந்த மாபெரும் கணித இயல்பியல் மேதை சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 141 ம் பிறந்தநாள். ஒரு சிறு நினைவு கூறல். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக