மண்ணிலே கலைவண்ணம் ........
சாலையூர் ,விளாமரத்துப்பட்டி கிராமம் ...உடுமலைப்பேட்டை ....
இரண்டு ஆண்டுகளாக, வேலைவாய்ப்பின்றி, பாதித்திருந்த மண் பாண்ட தொழிலாளர்களுக்கு, கிராமங்களில், கொண்டாடப்படும் சித்திரை திருவிழாக்களால், மீண்டும், வேலை கிடைத்துள்ளது. பாரம்பரியத்தை கைவிடாமல், மண்ணிலே கலைவண்ணம் காணும் இத்தொழிலாளர்களுக்கு அரசு உதவ வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பரவலாக, பாரம்பரியமாக மண்பாண்டங்கள் மற்றும் கிராமத்திருவிழாக்களுக்கான உருவாரங்கள் செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.புக்குளம், கண்ணமநாயக்கனுார், மரிக்கந்தை, பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில், இருந்த இத்தொழிலாளர்கள் பலர், தொழிலில், ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.குறிப்பாக, மண் பாண்டங்கள் செய்ய, குளங்களில் மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது; மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து விற்பனையும் பாதித்ததால், பலர் பாரம்பரிய தொழிலை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.
இருப்பினும், சிலர், பல்வேறு இடையூறுகளை சந்தித்தும், பாரம்பரியத்தை கைவிடாமல், இத்தொழிலை தொடர்ந்து வருகின்றனர்.ஊரடங்கால் தவிப்புகொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கிராம கோவில்களில், அனைத்து திருவிழாக்களும் தடைபட்டன. இதனால், அகல் விளக்குகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யக்கூட வழியில்லாமல், மண் பாண்ட தொழிலாளர் தவித்தனர்; குடும்பத்தினரும் பாதித்தனர்.பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினருக்கு, அரசு தரப்பில், இந்த ஊரடங்கு காலத்தில், எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.திருவிழாக்களால் உற்சாகம்கிராம கோவில்களில், இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த திருவிழாக்கள், இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக சித்திரை மாதத்தில், அனைத்து கிராமங்களிலும், சித்திரை திருவிழா நோன்பு சாட்டப்பட்டுள்ளது.இத்திருவிழாக்களில், மண்ணால் ஆன சுவாமி சிலைகளை, ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நிகழ்வு முக்கிய இடம் பிடிக்கிறது. மேலும், நாய், மாடு போன்ற கால்நடை வளம் பெருக, அவற்றின் உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டர்கள் குவிந்து, மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், உற்பத்தியில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாரம்பரியம் தொடரும்!இதுகுறித்து சாளையூரை சேர்ந்த, பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் கூறியதாவது: பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும், இத்தொழிலை கை விடாமல் செய்து வருகிறோம். தற்போது, பாப்பனுாத்து விளாமரத்துப்பட்டி கிராம மதுரைவீரன் கோவில் திருவிழாவுக்காக, சுவாமி சிலை செய்யும் பணி நடக்கிறது.இதற்காக குடும்பத்தினர் அனைவரும் விரதமிருந்து, சுவாமி சிலை தயாரிப்பில் ஈடுபடுகிறோம். அனுமதி பெற்று, தினைக்குளத்தில் இருந்து மண் எடுத்து, அதனுடன், புற்று மண் உள்ளிட்ட மண்ணை கலந்து, தண்ணீர் விட்டு, தயார் செய்கிறோம்.மண் ஈரப்பதத்துடன் இருக்கும் போது, சுவாமி உருவத்தை வடிக்கிறோம். பின்னர், உருவாரங்களை தீயிலிட்டு, பக்குவப்படுத்துகிறோம். இப்பணிகளில், குடும்பத்தினர் அனைவரும், இணைந்து பணியாற்றுகிறோம். வருவாய் குறைவாக இருந்தாலும், இறைவனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறோம்.
ஊர்வலத்தின் போது, எங்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்களே, சுவாமியை சுமந்து செல்கிறோம். பல்வேறு இடையூறுகள் இருந்தாலும், இத்தொழிலை கைவிடாமல், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல ஆர்வத்துடன் உள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.அரசின் கவனத்துக்கு...மண்பாண்டம் மற்றும் சுவாமி சிலைகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமாக ஒரு குளங்களில் மட்டுமே மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்கின்றனர்.
டிராக்டரில் ஒரு லோடு மண் எடுத்தாலே, அதை பல மாதங்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், இதற்கு வருவாய்த்துறை தரப்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். தொழிலாளர் நல வாரியங்கள் வாயிலாக அவர்களது குடும்பத்தினருக்கு, வேலைவாய்ப்பில்லாத காலங்களில், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
நன்றி ..தினமலர் ....





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக