கேள்வி : உங்களுடைய அறிவுக்கண் திறந்து விட்டதாக நீங்கள் உணர்ந்த தருணங்கள் எவை?
என் பதில் :என் கூட பள்ளியில் படித்த என் வகுப்பு நண்பர் ..உணவகம் வைத்து நடத்துபவர் என்னிடம் பகிர்ந்தது ....
படிச்ச ஆளு இப்படி அடுப்படில நின்னு பாக்குற வேலை செய்லாமா?
என்ன! டீம் லீடர் வேலைய விட்டுட்டு சாப்பாடு கடை வெச்சிருக்கானா?
பரவால்லயே! படிச்சுட்டு இந்தமாதிரி வேலை கூட பாக்குறாங்களே?
இப்படி பலர் என்னை கேட்கும் போதெல்லாம் ஒருவித குற்ற உணர்வு தான் மனதில் வரும். அவ்வளவாக தன்னம்பிக்கையும் உத்வேகமும் இந்த புதிய தொழிலின் மீது வரவில்லை.
சில மாதங்களுக்கு பின் ஒரு முதியவரின் ஒற்றை கேள்வியில் அது வந்தது.
என்னப்பா? சிறுசுல படிப்பு ஏறலயா, ஹோட்டல் வேலை செய்கிறாயே?
என்றார்.
அதற்கு முன் வரை அனைவரும் என்னை ஒரு படித்த இளைஞனாக பார்த்தார்கள், இவர் ஒரு ஹோட்டல் கடைக்காரனாக என்னை பார்த்த அந்த தருணம் தான் எனக்கு தன்னம்பிக்கை வந்தது.
இப்போது நான் ஒரு ஹோட்டல் காரர் என முழுமையாக என்னை ஏற்றுகொள்ள வைத்தது.
முழுசா சந்திரமுகியா மாறின கங்காவை போன்ற உணர்வு என்றார்.
பிறகுதான் எனக்கு தோன்றியது.
எல்லோரும் படிக்கிறோம், படித்து முடித்தவுடன் உடனடியாக ஒரு வேலைக்கு சென்று அப்போதைய குடும்ப சூழ்நிலைக்காக உழைக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
பார்க்கும் அனைவரும் இதையே தொடரும் படி நம் மனதில் Inception செய்துவிடுகின்றனர்.
இப்படியாக என் அடையாளம் இதுதான் என்று சமுதாயத்துக்கு காட்டியும் விடுகிறோம். ஆனால் உண்மையில் என் அடையாளம் இதுமட்டுமல்ல.
இதை தாண்டி நான் யார் என முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் முப்பது வயதை நெருங்கும் போது துளிர்விடுகிறது.
அப்போது என் பழைய அடையாளத்தை முழுவதுமாக மாற்றி புதிய அடையாளம் ஒன்றை உருவாக்குவதென்பது மிக மிக சவாலான ஒன்று.
எல்லா கோட்டையும் அழித்துவிட்டு முதல்ல இருந்து எளிதாக ஆரம்பிக்க நாம ஒன்னும் பரோட்டா சூரி கிடையாதே!
அதனால் எனக்கான அடையாளத்தை நானே உருவாக்குவதற்கான காலம் இதுதான்
என உணர்ந்து அறிவுக்கண் திறந்தது.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக