செவ்வாய், 29 ஏப்ரல், 2025

மண்ணிலே கலைவண்ணம் ........ சாலையூர் ,விளாமரத்துப்பட்டி கிராமம் ...உடுமலைப்பேட்டை ....






 மண்ணிலே கலைவண்ணம் ........

சாலையூர் ,விளாமரத்துப்பட்டி கிராமம் ...உடுமலைப்பேட்டை ....
இரண்டு ஆண்டுகளாக, வேலைவாய்ப்பின்றி, பாதித்திருந்த மண் பாண்ட தொழிலாளர்களுக்கு, கிராமங்களில், கொண்டாடப்படும் சித்திரை திருவிழாக்களால், மீண்டும், வேலை கிடைத்துள்ளது. பாரம்பரியத்தை கைவிடாமல், மண்ணிலே கலைவண்ணம் காணும் இத்தொழிலாளர்களுக்கு அரசு உதவ வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பரவலாக, பாரம்பரியமாக மண்பாண்டங்கள் மற்றும் கிராமத்திருவிழாக்களுக்கான உருவாரங்கள் செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.புக்குளம், கண்ணமநாயக்கனுார், மரிக்கந்தை, பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில், இருந்த இத்தொழிலாளர்கள் பலர், தொழிலில், ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.குறிப்பாக, மண் பாண்டங்கள் செய்ய, குளங்களில் மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது; மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து விற்பனையும் பாதித்ததால், பலர் பாரம்பரிய தொழிலை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.
இருப்பினும், சிலர், பல்வேறு இடையூறுகளை சந்தித்தும், பாரம்பரியத்தை கைவிடாமல், இத்தொழிலை தொடர்ந்து வருகின்றனர்.ஊரடங்கால் தவிப்புகொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கிராம கோவில்களில், அனைத்து திருவிழாக்களும் தடைபட்டன. இதனால், அகல் விளக்குகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யக்கூட வழியில்லாமல், மண் பாண்ட தொழிலாளர் தவித்தனர்; குடும்பத்தினரும் பாதித்தனர்.பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினருக்கு, அரசு தரப்பில், இந்த ஊரடங்கு காலத்தில், எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.திருவிழாக்களால் உற்சாகம்கிராம கோவில்களில், இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த திருவிழாக்கள், இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக சித்திரை மாதத்தில், அனைத்து கிராமங்களிலும், சித்திரை திருவிழா நோன்பு சாட்டப்பட்டுள்ளது.இத்திருவிழாக்களில், மண்ணால் ஆன சுவாமி சிலைகளை, ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நிகழ்வு முக்கிய இடம் பிடிக்கிறது. மேலும், நாய், மாடு போன்ற கால்நடை வளம் பெருக, அவற்றின் உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டர்கள் குவிந்து, மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், உற்பத்தியில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாரம்பரியம் தொடரும்!இதுகுறித்து சாளையூரை சேர்ந்த, பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் கூறியதாவது: பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும், இத்தொழிலை கை விடாமல் செய்து வருகிறோம். தற்போது, பாப்பனுாத்து விளாமரத்துப்பட்டி கிராம மதுரைவீரன் கோவில் திருவிழாவுக்காக, சுவாமி சிலை செய்யும் பணி நடக்கிறது.இதற்காக குடும்பத்தினர் அனைவரும் விரதமிருந்து, சுவாமி சிலை தயாரிப்பில் ஈடுபடுகிறோம். அனுமதி பெற்று, தினைக்குளத்தில் இருந்து மண் எடுத்து, அதனுடன், புற்று மண் உள்ளிட்ட மண்ணை கலந்து, தண்ணீர் விட்டு, தயார் செய்கிறோம்.மண் ஈரப்பதத்துடன் இருக்கும் போது, சுவாமி உருவத்தை வடிக்கிறோம். பின்னர், உருவாரங்களை தீயிலிட்டு, பக்குவப்படுத்துகிறோம். இப்பணிகளில், குடும்பத்தினர் அனைவரும், இணைந்து பணியாற்றுகிறோம். வருவாய் குறைவாக இருந்தாலும், இறைவனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறோம்.
ஊர்வலத்தின் போது, எங்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்களே, சுவாமியை சுமந்து செல்கிறோம். பல்வேறு இடையூறுகள் இருந்தாலும், இத்தொழிலை கைவிடாமல், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல ஆர்வத்துடன் உள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.அரசின் கவனத்துக்கு...மண்பாண்டம் மற்றும் சுவாமி சிலைகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமாக ஒரு குளங்களில் மட்டுமே மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்கின்றனர்.
டிராக்டரில் ஒரு லோடு மண் எடுத்தாலே, அதை பல மாதங்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், இதற்கு வருவாய்த்துறை தரப்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். தொழிலாளர் நல வாரியங்கள் வாயிலாக அவர்களது குடும்பத்தினருக்கு, வேலைவாய்ப்பில்லாத காலங்களில், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
நன்றி ..தினமலர் ....

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

வள்ளல் பெருமக்களை வரலாற்றுச்சின்னங்களை வட்டார தெய்வங்களாக வழிபடும் மக்கள்

 வள்ளல் பெருமக்களை வரலாற்றுச்சின்னங்களை  வட்டார தெய்வங்களாக வழிபடும் மக்கள் 































மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கொழுமம் பகுதியில் வள்ளல் பெருமகன்  குமணன் வாழ்ந்தமைக்கான சான்றுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு வகையில் அந்தக்காலத்து மக்கள் வாழ்ந்த நீர்நிலைகளையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் அவர்கள் தொடர்ச்சியான ஆய்வுகளில்  குமணன் மகராசாவாகவும், தற்போது நாட்டுப்புற மக்கள் வழக்காறுகளில் நடுகல் தெய்வமாகவும் வைத்து வழிபட்டு வருவதை கொழுமம், ஆத்தூர், மடத்தூர் பகுதி மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

ஓவ்வொரு மாதமும் வெள்ளுவா, எனும் பௌர்ணமி நாளிலும் காருவா எனும் அமாவாசை நாட்களிலும் பொதுமக்கள் தம் விரும்பி உண்ணும் இயற்கை உணவுகளைப் படையலாக வைத்து வழிபாடு செய்கின்றனர். இன்னும் சிலர் அசைவ உணவுகளாக கோழி, ஆடு இவைகளை பலியிட்டும் வழிபாடு செய்து வருகின்றனர்.

கொழுமத்திற்கு அருகில் இருக்கும் வலசு கருப்பணசாமி கோயிலில் அமாவாசை நாளில் கடந்த காலங்களில் ஆடு ,கோழி பலி கொடுத்து வழிபாடுசெய்த மக்கள் வனச்சரகக் கட்டுப்பாட்டின் காரணமாக தற்போது வனத்திற்குள் சென்று வழிபாடு செய்ய முடிவதில்லை. எனவே, வனத்திற்குள் செல்லாமல்  வனத்தின் முன்பகுதியில் நடுகல் வைத்து வழிபாடு செய்து வருவதையும் காணமுடிகிறது.

சங்க இலக்கியப்பாடல்களில்  குமணனைக் காணவரும் பெருஞ்சித்திரனார் எனும் புலவர்  கண்ணாடிப்புத்தூர், கொழுமம் வழியாக குமணனைக் காணச் சென்றதும், அவர் செல்லும் வழியில்  சந்தன மரம், கமுகு மரம் இருந்ததையும்,  மான்கள், பசு மாடுகள் இருந்தையும் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.

அதுபோன்று தற்போதும் சந்தன மரங்களும், கமுகு மரங்களும் நீர் நிலைகளும் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிகின்றது. 

அமாவாசை நாட்களில் பெரும்பாலான மக்கள் இந்த வலசு கருப்பணசாமி கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து விட்டு போகின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி மக்க்ள என்றில்லாமல்  இங்கு அனைத்து சாதி பொதுமக்களும் வருகின்றனர். குறிப்பாக மண்ணுடையார் சமூகத்தினர் பெரும்பாலும் இங்கு பூசை செய்து வருகின்றனர்.

வட்டார வழிபாடுகளில் இன்னமும் பழங்காலத்து பழக்கவழக்கங்கள் இருப்பதும், நடுகல் வழிபாடுகளில் கொழுமம், ஆத்தூர், மடத்தூர், சங்கராமநல்லூர் பகுதி மக்கள் காலையிலேயே தம் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் வந்து தங்கியிருந்து சமையல் செய்து விருந்து படைத்து வழிபாடு செய்து செல்கின்றனர்.

இவர்கள் இந்த வழிபாடு குறித்து சொல்லும் தம் மூதாதையர்கள் காலங்காலமாக வழிபட்டு வருவதைத் தொடந்து தாங்களும் வழிபட்டு வருவதாகவும், தம் வீட்டில் எந்த நல்லது கெட்டது நிகழ்வு நடந்தாலும் இங்கு வந்து படையலிட்டு வழிபாடு செய்து விட்டு செல்வதாகவும் கூறுகின்றனர்.

புதன், 23 ஏப்ரல், 2025

உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாறு வெளியிட்ட புத்தகங்களைப் பார்ப்போம்.

ஏப்ரல் 23 உலகப்புத்தக நாள்

உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாறு வெளியிட்ட புத்தகங்களைப் பார்ப்போம்.

இதுவரைக்கும் எட்டு புத்தகங்கள்.
எட்டு புத்தகங்களும் எட்டாத வரலாற்றைச் சொல்லுவது.
ஒன்று நமது மண்ணுக்கு மணி மண்டபத்தை (சமூக அரங்கையும்) தளி எத்தலப்பர் சிலையும் கொண்டு வந்தது.
தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்.
இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்குத் தேர்வு செய்யப்பட்டு கல்வி நிதி உதவியோடு நடைபெற்று வருகிறது. குறித்த காலகட்டத்தைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்

உடுமலை வரலாறு
முகம் தெரிந்த முன்னூறு ஆண்டு கால மண்ணில் இதுவரைக்கும் யாரும் எழுதிடத் துணிந்திடாது ஒரு வரலாற்று நூல் , உடுமலையின் அடையாளம். , சமூக வரலாற்று நூல்

தென்கொங்கின் தொன்மங்கள்
நமது பகுதியில் இருக்கும் புராண, ஆயிரம் ஆண்டுகாலத்திற்கும் முற்பட்ட கற்றளிக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி வெளியிடப்பட்ட தொல்லியல் சார்ந்த நூல்

கரைவழிநாடும் நாகரிகமும்
சங்க இலக்கியப்பாடல்களிலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி கரை வளி என்று சொன்னால் அது அமராவதி கரைவளிதான். அந்த வகையில் கரைவழி நாடுகள் என்று கொங்கு நாட்டு ஆவணங்களில் கூறப்படும் நாடு கரைவளி நாடு.

அந்த கரைவளி நாட்டின் நாகரிகத்தை, வளத்தை தனித்தனியாக கல்வெட்டுகள் தனியாகவும், இரண்டு பகுதிகளாக ஆவணப்படுத்தப்பட்ட நூலே கரைவளி நாடும் நாகரிகம். இதில் வேளாண்மை தனியாகவும், கல்வெட்டுகள் தனியாகவும் என இரண்டு நூல்களாக எழுதப்பட்டுள்ளது.

கடைசியாக இந்த ஆண்டில் அயிரை எனும் ஐவர் மலை , மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் சின்னங்கள்.
இதில் அயிரை எனும் ஐவர் மலையின் ஈராயிரம் ஆண்டு கால வரலாறு, குமணனுக்கான கல்வெட்டு, சேரன் செங்குட்டுவன் அயிரை தெய்வத்தை வழிபட்ட பதிற்றுப்பத்து பாடல்கள், சமணர்கள் தங்கியிருந்து மருத்துவம் , கல்வி ஆகியவற்றை மக்களுக்குப் போதித்தது ஆகியனவற்றை சுருக்கமாகக் கூறும் நூல்.

மேற்குத்தொடர்ச்சி மலை சாரல் சின்னங்கள், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கடந்த இருபது ஆண்டுகளாக களப்பணியில் கிடைத்த தரவுகளை, மக்கள் எளிதில் அறியும் வண்ணம் ஒரு கையடக்க நூலாக, வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் என நமது பகுதியில் அனைத்து சின்னங்களையும் கையேடாக மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

உடுமலை மண்ணுக்காகவும்,

 உடுமலை மண்ணுக்காகவும்,

மக்களுக்காகவும்
நாள்கள், வாரங்கள்
திங்கள்,
மாதங்கள்,
ஆண்டுகள்
என கடந்த
25 ஆண்டுகளுக்கும்
மேலாக களப்பணியாற்றியதில்
இந்த மண்ணுக்காகவும்
மக்களுக்காகவும்
படைத்திட்டதில்
மகிழ்ச்சி
ஓன்று மணி மண்டபம் தந்தது
இன்னொன்று ஊருக்கே அடையாளம் தந்தது
மற்றொன்று
மறுமலர்ச்சி தொல்லியல் வரலாற்றைக்
காண வைத்தது.
நன்றி
மக்களுக்கும்
மண்ணுக்கும்.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்
எல்லோராலும் மதிக்கப்படும்
புத்தகம் பெரும்பாலானோரால்
படிக்கப்படுவதில்லை.!
புத்தகங்களை படிப்பதை விட..
மனிதர்களை படிப்பதே
மிக மிக முக்கியம்
சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க
முடியாத பொக்கிஷங்களை
தன்னகத்தே தாங்கியுள்ள
எல்லையற்ற சமுத்திரங்கள்.
மனிதர்கள் மரணமடைகிறார்கள்
ஆனால் அவர்களின் புத்தகங்கள்
மரணம் அடைவதில்லை..
புத்தகங்கள் மனிதனை உருவாகின்றன..
புத்தகங்கள் மனிதர்களை உறக்கத்தில்
இருந்து விழிப்படைய செய்கின்றன.
மாபெரும் புரட்சிகளுக்கு புத்தகங்கள் தான்
காரணமாக இருக்கின்றன.
அவைகள் சாகாவரம் பெற்றவை.
உடுமலை வரலாறு உலக புத்தகத் தினம்

உலகப் புத்தக நாள்

 உலகப் புத்தக நாள்

அறிவை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்து விட்டுச் செல்லும் ஓர் உன்னதமான கருவி.
சங்க காலப்புலவர்களை நாம் கண்டதில்லை, ஆனால் அப்போதைய வாழ்க்கை முறையினை படித்தறிகிறோம்.
அறிவாளிகள் என்று சொல்லும் ஆசான்கள் இன்னமும் நமக்கு புத்தகம் வழியே அறிவைக் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர். அவர்களின் புத்தகங்கள் வழியே.
திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், இவர்களை இன்னமும் இந்த சமூகம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.
அம்பேத்கர், தந்தை பெரியார் கார்;ல் மார்க்ஸ் இவர்கள் எழுதியது மட்டுமல்லாமல் வாழ்வியலோடு சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள். அதனால் அவர்களின் எழுத்தும், பேச்சும் இன்னமும் சமூகத்தில் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அவர்களின் எழுத்துக்கள் காலம் கடந்தும் வாழ்கின்றது. வாழும் .
கொங்கு நாட்டில் பிறவாவிட்டாலும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஏராளமான நூல்களை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார். கோவை கிழார், புலவர் ராசு போன்ற அறிஞர் பெருமக்களும் கொங்கு நாட்டு மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் எழுத்துக்களாக புத்தகங்களை வடித்துள்ளனர்.
அந்த வகையில் உடுமலை மற்றும் சுற்று வட்டார மக்களுக்காக, ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் நமது பகுதியின் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி கரைவழி நாடும் நாகரீகமும் எனும் நூலை இந்த ஆண்டு படைத்திட்டமைக்கு பெரும் உவகை அடைகிறோம்.
உடுமலையில் ஒரு மணி மண்டபம் எனும் சமூக அரங்கும். தளி எத்தலப்பருக்கு உடுமலை நகராட்சி வளாகத்தில் சிலையும் அமைக்கப்பட்டதெனில் அது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலே.

இன்று உடுமலையின் பெரும் ஆளுமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த நூலே உடுமலை வரலாறு.
கொங்கு நாடு மிகப்பெரியது அதில் தென்கொங்கு எனப் பிரித்து அதில் உள்ள கற்றளிக் கோயில்களுக்காக வெளியிடப்பெற்ற புத்தகமே தென்கொங்கின் தொன்மங்கள்.
அமராவதி கரைவளி, ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத்திற்கும் முற்பட்டது. இதற்குச் சான்றுதான் கரைவழி நாடும் நாகரீகமும்.
கே. வில்லேஜஸ் எனும் கல்லாபுரம், கொழுமம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு மற்றும் கடத்தூர் எனக் கல்வெட்டுகளோடு வேளாண்மை பற்றிய பதிவுகளையும் கூறும் நூலே கரைவழி நாடும் நாகரீகமும்.
இந்த உலகப் புத்தக நாளில் உடுமலை வரலாற்று நூல்களை உங்களுக்குப் படையலிடுவதில் இரும்பூதெய்துகிறோம்.
உடுமலை வரலாறு 23.04.2025

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இந்த தலைமுறையினர் பலர் எண்ணுவதற்கு என்ன காரணம்?

 

திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இந்த தலைமுறையினர் பலர் எண்ணுவதற்கு என்ன காரணம்?

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து விட்டது அல்லது மாறிவிட்டது

திருமணம் என்றால் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் ஒருவருக்கொருவர் அனுசரிக்க வேண்டும் அதெல்லாம் முடியாமல் போனதற்கு காரணம் என்னவென்றால் குழந்தைகள் ஒருவராக அல்லது அதிகம் போனால் இருவராக மட்டும் வாழ்வதுதான்.

நிறைய குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தே வளர்ந்திருப்பார்கள்.

அடிக்கடி சண்டை போட்டு சமாதானம் ஆகி இருப்பார்கள். சகோதர உறவுகள் மிகப் பெரிய மிக நீண்ட தொடர்கதை.

பிறந்ததிலிருந்து இறப்பு வரை அவர்களுடைய தொடர்பு இருக்கும்.

மற்ற உறவுகள் அப்படி இல்லை. அதனால் இந்த நிலைமை வந்திருக்கலாம்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும் அனுசரித்துப் போவதும் இல்லாமல் போய்விட்டதால் இன்றைய குழந்தைகளுக்கு நான் ஏன் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் நான் ஏன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சற்றே சுயநலம் கலந்த பிடிவாதம் கூடி விட்டதால் இந்த நிலைமை என்று தான் கூற முடியும்.

அதற்காக எல்லோரையும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறவா முடியும்? காலத்தின் கட்டாயம். இனி கல்யாணம் என்பது ஒருவருடைய விருப்பத்தேர்வாக தான் இருக்கும்.

தவறு ஏதும் இல்லை என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணம் செய்து கொள் என்று வற்புறுத்த மாட்டார்கள்.

Non- emotional sex மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 40லிருந்து 50 55 வயதில் உள்ளவர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள்.

இது நான் அண்மையில் தெரிந்து கொண்ட சற்று அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகவே இருக்கிறது. ஏனென்றால் நானும் நூறு விழுக்காடு முற்போக்கு சிந்தனை கொண்ட நபர் என்று கூறிக் கொள்ள முடியாது.

ஆனால் அவர்களுடைய நிலைமையில் இருந்து பார்க்கும்போது தவறு ஏதுமில்லை ஏனென்றால் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நன்றாக சிந்திக்கிறார்கள் பாதுகாப்பான பாலியல் உறவுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்..

இதற்கு மேல் நாம் என்ன சொல்வதற்கு இருக்கிறது?

சனி, 12 ஏப்ரல், 2025

குலதெய்வம் அறிவியல் உண்மை

 


குலதெய்வம் அறிவியல் உண்மை

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா…..?
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
நன்றி - - - - சித்தர் அறிவியல்

வியாழன், 10 ஏப்ரல், 2025

கேள்வி : வீடு கட்டுபவர்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?

 


கேள்வி :  வீடு கட்டுபவர்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?


பதில் : 

வீடு கட்டும் போது பலரும் செய்யும் சில தவறுகள் என்னுடைய அனுபவத்தில்:

1. திட்டமிடாமல் தொடங்குவது

பலரும் சிறந்த ஒரு திட்டம் இல்லாமல் நேரடியாக வேலைக்கு இறங்கிவிடுகிறார்கள். வீட்டு வடிவமைப்பு, பட்ஜெட், மற்றும் தேவையான அனுமதிகள் போன்றவை தெளிவாக இருந்தால்தான் வேலை விரைவாகவும், பொருளாதார ரீதியாகவும் செழிக்க முடியும்.

2. கணக்கற்ற செலவு செய்யுதல்

ஆரம்ப கட்டத்தில் சரியாக கணக்கிடாமல் பிறகு செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். உபயோகப்படும் பொருட்கள், வேலைக்காரர்கள், மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவற்றை சரியாக திட்டமிட வேண்டும்.

3. தகுதியற்ற தொழிலாளர்களை நம்புவது

சிறந்த வேலைப்பாடும், நிலைத்தன்மையும் தரும் தொழிலாளர்களை தேர்வு செய்யாமல், குறைந்த செலவுக்காக அனுபவம் குறைவானவர்களை தேர்வு செய்வதால் பின்னர் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

4. கட்டுமான தரத்தை அலட்சியமாக பார்க்குதல்

சிலர் நல்ல தரமான கான்கிரீட், மண், சிமெண்ட் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குறைந்த தரத்திலான பொருட்களை வாங்குகிறார்கள். இது வீட்டின் ஆயுளை குறைக்கும்.

5. மழைநீர் வடிகால், அடித்தளத் திட்டங்களை ஏளனமாக பார்ப்பது

அடித்தளத்தில் சரியான தண்ணீர் வடிகால் ஏற்பாடுகள் இல்லாவிட்டால், நீர் கசியல் பிரச்சனை மற்றும் தரை நனைவு ஏற்படும்.

6. சட்ட மற்றும் அனுமதிகளை புறக்கணித்தல்

அரசின் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றாமல் வீடு கட்டினால், பின்னர் சட்டப்பிரச்சனைகள் வரலாம்.

7. நல்ல வடிவமைப்பை பின்பற்றாதது

சரியான உள்ளமைப்பு, வெளிச்சம், காற்றோட்டம் போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் வீடு கட்டினால், வசதியாக இருக்காது.

இவை எல்லாம் அனுபவத்தில் பார்த்த தவறுகள். சரியான திட்டமிடல், தரமான வேலை, மற்றும் அறிவார்ந்த செலவினம் மூலம் சிறப்பான வீடு கட்டலாம்!

V K சிவக்குமார் 

வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 

9944066681