செவ்வாய், 26 நவம்பர், 2019

மக்கள் எவ்வாறு செல்வந்தர்களாகிறார்கள்?

மக்கள் மூன்று படிகளில் ஏறி செல்வந்தர்கள் ஆகின்றனர். மூன்று படிகளுமே முக்கியம். ஒரு படியில் ஏறாமல் அடுத்தபடிக்கு செல்ல இயலாது.

முதல் படி; அதிகமாக சம்பாதிப்பது
இரண்டாவது படி; சம்பாதித்த பணத்தில், அதிகமாக சேமிப்பது
மூன்றாவது படி; சேமித்த பணத்தில், பரவலாக முதலீடு செய்வது

இவை ஒவ்வொன்றாக பார்ப்போம்.....

1.அதிகமாக சம்பாதிப்பது ; நல்ல ஒரு வேலையிலோ, நல்ல ஒரு தொழிலிலோ நல்ல ஒரு சம்பாத்தியத்தினைப் பெறுவது. குறைவாக சம்பாதிக்கும் பட்சத்தில், சம்பாதிக்கும் பணமானது, வாழ்க்கை கடத்தும் அளவிற்கே உதவும். இவ்வாறு, அதிகமாக சம்பாதிக்க என்ன செய்ய முடியும் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

சம்பாதித்த பணம் போதவில்லை என்றால், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போவதுதொழில் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு, தன் திறனை வளர்த்து வேறு வேலையோ, அல்லது பதவி உயர்வோ அடைவது
சம்பாதிக்கும் நபர், பகுதி நேரமாக , மற்றொரு வேலையிலோ, தொழிலிலோ இறங்குவதுநமக்கு தெரிந்த, பிடித்த விஷயங்கள் சார்ந்த தொழிலில் இறங்குவது. உதாரணமாக, சங்கீத ஞானம் உள்ளவர்கள், சங்கீத வகுப்புகள் எடுக்கலாம்.வீட்டின் மாடியை வாடகைக்கு விட்டு, வாடகை பணம் கிடைப்பது

2. சம்பாதித்த பணத்தில், அதிகமாக சேமிப்பது; சம்பாதித்த பணத்தை, இழக்காமல் , அதிக அளவில் சேமிக்கப் பார்க்க வேண்டும். சிலர் மாத சம்பளத்தில், 10% சேமிப்பர். 50 - 70% சேமிக்கும் மக்களும் உள்ளனர். இந்தப் படியானது, முதல் படியை விட எளிமையானது தான். சம்பாதித்த பணம் ஏற்கனவே உள்ளது. அதனை எவ்வாறு சேமிப்பது என்று யோசிக்க வேண்டும். இதற்கு சில விஷயங்கள் முக்கியம்.

சிக்கனமான வாழ்க்கை வாழுவது; எந்த ஒரு வீண் செலவும் செய்யாமல், பணத்தை திட்டமிட்டு(Budget) செலவழித்து வாழ வேண்டும். பணத்திட்டத்திற்குள்ளாக, வாழ்க்கை நடத்த வேண்டும்.

கடன்களை அறவே ஒதுக்க வேண்டும்; சம்பாதித்த பணமானது, கடன்களை கட்டுவதற்காக மாட்டிக் கொண்டு விட்டால், முதலீட்டிற்கு பணம் ஒதுக்க முடியாது. கடன்களை அறவே ஒதுக்க வேண்டும். கடன் உள்ள மனிதன், அடிமை மனிதன். எதிர்காலத்தினை அவன் கடனிடம் அடகு வைக்கிறான்.

அவசர கால நிதியினை வைத்திருக்க வேண்டும்; அவசர கால நிதியானது, வீட்டின் அவசர தேவைகளில், பிறரை கையேந்தாமல் சமாளிக்க உதவும். கடனைத் தவிர்க்கும்.

உடல்நல, காலவரை சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தினை கொள்ள வேண்டும்; காப்பீட்டுத் திட்டமானது, திடீரென்று வரும் அவசர மருத்துவ தேவைகளுக்கு, கடன் வாங்காமல் காக்கும். வாழ்க்கையின் மீது நம்பிக்கையைத் தரும்.
தேவை சார்ந்த வீடு, வாகனங்கள் வாங்க வேண்டும்; வீடும், வாகனமும் ஒருவரின் வாழ்வின் மிகப் பெரிய செலவுகள். அவை தேவைக் கேற்றபடி வாங்க வேண்டும். இல்லையேல், பெரிய கடன் சுமையில் சிக்க வைத்து விடும்.

சம்பாதித்த பணத்திற்குள்ளாக வாழ்க்கை நடத்துவது; செலவானது என்றும் வரவினைத் தாண்டாமல், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, பணத்தை சேமிப்பது.
ஒவ்வொரு செலவினையும் கவனமாக செய்வது; வெளியே சாப்பிடுவது, திரைப்படம் பார்ப்பது, சஞ்சிகைகள் வாங்குவது என்று ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து, பணத்தை சேமிப்பது அவசியம்
அலுவலகம் சார்ந்த, அங்காடி சார்ந்த எந்த ஒரு சலுகைகளையும் உபயோகப்படுத்திக் கொள்வது; எந்த ஒரு நியாயமான சலுகைகளின் மூலம் பணத்தினை சேமிப்பது அதிக பணம் சம்பாதித்தாலும், வாழ்க்கைத் தரத்தை என்றுமே மாற்றாமலிருப்பது; இதனை ஆங்கிலத்தில், Lifestyle inflation என்று கூறுவர். அதாவது, அதிகமாக சம்பாதிக்கும் போது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது. இது மீண்டும் அதிக பணத்தை இழக்க வைக்கும். அதிகமாக பணம் சம்பாதித்தாலும், வாழ்க்கைத் தரத்தை முன்பு போலவே, சிக்கனமாக வாழ்ந்து, பணம் சேமிப்பது

குறிப்பு; எல்லாவற்றிற்கும் மேலாக, சேமித்த பணத்தில், ஈகைக்காக ஒதுக்குவது முக்கியம். தன்னை ஆளாக்கிய, வாழ வைக்கும், சமுதாயத்தில் தன் கடனை செலுத்துவது, மனிதனின் கடமை.


3. சேமித்த பணத்தினை பரவலாக முதலீடு செய்வது ; சேமித்த பணம், முதலீடு இன்றி, பணவீக்கத்தினை எதிர்கொள்ள முடியாது. இங்கு பரவலாக என்ற வார்த்தை முக்கியம். ஒரு முதலீடு தோற்றாலும், இன்னொன்று காப்பாற்றி விடும். இந்த முதலீடானது, சீக்கிரமாக தொடங்கப்பட்டு, நீண்ட நாட்களுக்கு, தொந்தரவு செய்யாமல், வளர வைக்கப்பட வேண்டும். முதல் இரண்டு படிகளைக் கடந்தால் மட்டுமே, இங்கு வர முடியும். அதிகம் சம்பாதித்தால் தான் , தேவை போக சேமிக்க முடியும். சேமித்தால் தான் முதலீடு செய்ய முடியும்.

இவற்றிற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பங்குகளின் ஈவுத் தொகையை மறு முதலீடு செய்வது ; ஈவுத் தொகையை செலவழிக்காமல் மறு முதலீடு செய்வது
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது; பரஸ்பர நிதிகள் பரவலாக முதலீடு செய்வதால் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு.
தொழிலினை பெருக்கி, விரிவு படுத்துவது; தொழிலில் அதிகமாக முதலீடு செய்வதன் மூலம், விரிவு படுத்தி, பணத்தினைப் பெருக்குவது

அரசாங்க வரி சலுகை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்வது ; பொது ஓய்வுகால வைப்பு நிதி, தேசிய சேமிப்புத் திட்டம் , கிஸான் விகாஸ் பத்திரம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற வரிசலுகை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது. இங்கு வளரும் பணமானது, முழுமையாக கிடைக்கிறது. அரசின் தொழில் சார்ந்த திட்டங்களை உபயோகப்படுத்திக் கொள்வது.

முதலீடுகளை நீண்ட காலம் தொடர்வது; முதலீடுகள் பணம் தர, காலம் ஆகும். அது வரை, பொறுமையாக காத்திருந்து முதலீட்டினை வளர விடுவது. நடுவில் எடுப்பது என்பது தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமம். அடிக்கடி விதையினை தொந்தரவு செய்தால், விதையானது மரமாக வளராது. நன்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் விதை, மரமாக மாறி, கனிகளைக் கொடுக்கும்.

பரவலாக முதலீடு செய்வது; ஒரே தொழிலில் என்று இல்லாமல், பல தொழில்களில் இறங்குவது. ஒரே முதலீடு என்று இல்லாமல், பங்கு சந்தை சார்ந்த பரஸ்பர நிதி, கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதி, பங்குகள், தங்கம், நிலம் என்று முதலீட்டினை பரவலாக்குவது.திடீரென்று கிடைக்கும் பெரும் பணத்தை உடனே முதலீடு செய்வது; ஏதேனும் தொழிலில், அல்லது அலுவலகத்தில் கிடைக்கும் உபரி பணத்தினை உடனே முதலீடு செய்வது. வீண் செலவு செய்யாமலிருப்பது.

தன் தொழிலில், தன் திறன்களில் முதலீடு செய்வது; இத்தகைய முதலீடானது, தன் அலுவலகத்தில் எதிர்காலத்தில் அதிக சம்பள உயர்வு பெற வழிவகுக்கும். தொழிலில் முதலீடு தொழிலினைப் பெருக்கும்.

தொடர்ந்து முதலீடு செய்வது; பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள், பொருளாதார மந்தம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், என் கடன் முதலீடு செய்வதே என்று தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டினை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.இவ்வாறு, முதலீடு செய்த பணமானது, கூட்டு வட்டித் த த்துவத்தின்படி, பல்கிப் பெருகி, பெரும் பணமாக மாறி பணக்கார மனிதனாக மாற வைக்கும். தொழில் முதலீடு செய்த பணமானது, தொழிலைப் பெருக்கி, பணத்தைப் பெருக்கி, பணக்கார மனிதனாக மாற்றும்.

மனிதர்கள் படிப்படியாக பணக்காரர் ஆகின்றனர். அதற்கு பொறுமை வேண்டும். மூன்று படிகளில் ஒன்றில் சறுக்கினாலும், பணக்காரர் ஆக முடியாது. எவருமே, ஒரே நாளில் பணக்காரர் ஆக முடியாது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் வசனம் போல்,

பணக்காரர் ஆவதற்கு இந்த மூன்று விஷயங்களிலும் விடா முயற்சி வேண்டும். அப்போது தான், விஸ்வரூப வெற்றியான பணக்காரர் ஆக முடியும்.
KVT BUSINESSTYCOONS👍🌱🌱⛱⛱📚📚✒✒

திங்கள், 25 நவம்பர், 2019

சிறுதொழில்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வாறு புதிய வாடிக்கையாளர்களை பெறுகின்றன?

18 வருடம் மார்க்கெட்டிங் தொழிலில் இருந்ததினால்
கிடைத்த அனுபவத்தில் சொல்கிறேன்.எந்த பயிற்சி வகுப்புகளிலும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கின்ற முதல் அறிவுரை முதல் சந்திப்பில் எதிரில் இருப்பவர்களுக்கு கை குலுக்கி அவர்களிடம் விசிட்டிங் கார்டை கை மாறுவது தான் .

First impression is the best impression என்று ஆங்கிலத்தில் ஒரு
வார்த்தை நடை முறையில் புழக்கத்தில் உள்ளது .இதை
உங்கள் நடை முறை வாழ்க்கையில் பழக்கமாகவே வைத்து கொள்வது நல்லது .

உங்கள் தொழிலை பற்றிய ஐந்து நிமிட விளக்க உரையை உங்கள் விசிட்டிங் கார்ட் ஒரு நிமிடத்தில்
பிரதி பலிக்கும் .உங்கள் தொழிலை பற்றி உள்ள முழு வர்ணனையை உங்கள் இணையத்தளம் பிரதி பலிக்கும் .

முன் பின் பழக்கம் இல்லாத ஒருவரை நீங்கள் திடிரென்று சந்திக்க நேருகிறது ..இல்லது திருமண விழாக்களிலோ வேறு எங்கு வைத்தோ உங்கள் சொந்த பந்தங்களை பார்க்க நேருகிறது .

கண்டிப்பாக அனைவருக்கும் நீங்கள் என்ன தொழில் செய்கின்றிர்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் இந்த விசிட்டிங் கார்டை அவர்களுக்கு நீங்கள் கை மாறும் பொழுது உங்களின் தொழிலை பற்றிய
ஒரு விவரம் அவர்களுக்கு போய் சேருகிறது .

உங்களின் வாழ்வியலில் இந்த பழக்கத்தை நீங்கள் கடை பிடிக்கும் பொழுது ..பல business sours களில் இதுவும் ஓரிரு துளிகளாக உங்கள் வியாபாரத்தை பெருக்க உதவும்

அது மட்டுமல்ல பல வருடங்களாக வியாபாரம் செய்தும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை போன்று விசிட்டிங் கார்டுகள் குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது ஒரு வருக்கு ஒரு விசிட்டிங் கார்ட் கூட இல்லாமல்

தொழில் செய்பவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அது தங்களின் தொழிலின் நேர்த்தியையும் தரத்தையும் வெட்ட வெளிச்சமாக படம் பிடித்து காட்டுகிறது..

வெள்ளி, 22 நவம்பர், 2019

சிறுவயது முதலே எனக்கு என் வயது தோழர்களை விட சில வயது மூத்தவர்களே அதிகம் நட்பானவர்கள். அவர்கள் சொல்லும் அனுபவக் கதைகளே என்னை அதிகம் செதுக்கியவை. கல்விக் காலங்களில், டியூஷன், பள்ளி, கல்லூரி நேரம் போக அதிகமாய் அங்கு இருந்தது அவர்களுடன் பொது விஷயங்களைப் பேசுவதற்கே. வேலைக்குப் போன பின்னும் எனக்கு அமைந்த மேனேஜர்கள், டேமேஜர்களாக இல்லாமல் அண்ணன்களாகவே அமைந்தனர். 

பணியிடங்களை விட, மைதானங்களிலும், மலையேற்றங்களிலும், சுற்றுலாக்களிலும் அவர்களிடம் கற்றவையே மிக அதிகம். பெரும்பாலும் அவர்கள் சொல்பவை சுயபுராணங்களே. நீண்ட, தனிமையான தருணங்களில் மட்டுமே, மனதின் அடிவாரத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்துத் தருவர். தோல்விகள், உறவுகள், வெற்றிகள், இனிய தருணங்கள் என மனித வாழ்வின் பல முகங்களைக் காட்டி, என்னைப் பண்படுத்தியுள்ளனர். 

வியாழன், 21 நவம்பர், 2019

 "கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே"


வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பாடங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வித்தியாசமான அனுபவங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. 

பார்வையாளர் போலவே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கூடவே அதனை இங்கே பதிவு செய்து விட வேண்டும் என்பதனை கடமையாகவும் வைத்துள்ளேன்.

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்பதன் உண்மையான அர்த்தம் "கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே" என்பார். 

இதனை உணர நமக்கு வாழ்க்கையின் பிற்பகுதி தான் சரியாக இருக்குமோ? என்று தோன்றுகின்றது.

எது எவர்களுக்குத் தேவையோ அது அவர்களுக்கு ஏதோவொரு சமயத்தில் கிடைத்தே தீரும்.  வாங்குபவர்கள், வாங்க வேண்டியவர்கள், தேடிக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் தரம் பொறுத்து தகுதியான தரமான விசயங்கள் அவர்களைச் சென்று அடைந்தே தீரும் என்று நம்புபவன் நான்.

இப்போதைய விளம்பர உலகில் உங்கள் கொள்ளை எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்கும்? என்ற கேள்வி உங்களிடமிருந்து வரக்கூடும்.  உண்மை தான். ஆனால் என்னதான் நீங்கள் உங்களை ஒவ்வொரு இடத்திலும் முன்னிலைப்படுத்திக் கொண்டேயிருந்தாலும் அது எத்தனை காலம் நிலைத்து நிற்கும்?

எதிலும் நான் இல்லை. எவருடனும் சேர்வதும் இல்லை.

பலருக்கும் என் மேல் வருத்தம் இன்னமும் உண்டு.

காரணம் எழுத்து என்பது என் பொழுது போக்கு.  வாசிப்பவர்களுக்கு சில நிமிடங்கள் மகிழ்ச்சியைத் தந்தால் போதும். 

மேலும் நான் உனக்கு சந்தனத்தைத் தடவுகிறேன்.  நீ மறக்காமல் எனக்குத் தடவு போன்ற கொள்கைகளை எல்லாம் கடந்து வந்து நாளாகிவிட்டது.

அப்படித் தடவிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் திறமைகளை மறந்து இன்னமும் பரஸ்பரம் தடவிக் கொள்ளும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  சமீப காலமாக வலைபதிவிலும் இந்த தடவுதல் வேலை நடந்து கொண்டிருக்கின்றது.  வாட்ஸ் அப் அரட்டை போல வலைபதிவு பின்னூட்டங்களை நண்பர்கள் பயன்படுத்துவதைப் பார்த்து அவர்கள் வயதினை ஒரு கணம் மனதிற்குள் கொண்டு வந்து பார்த்தேன். அற்புதமான தொழில் நுட்பத்தை நாசமாக்குவதில் நம்மவர்களைத் தவிர வேறு எவரையும் என்னால் உதாரணமாகச் சொல்லத் தெரியவில்லை.

வயதாகிவிட்டது என்று ஒருவரைப் பார்த்து மதிப்பளிக்க வேண்டும் என்று கருதாதீர்கள். அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் அவர்களை எப்படிச் செதுக்கியுள்ளது? என்பதனை வைத்து முடிவு செய்யுங்கள்.  சில மிருகங்கள் கூட 50 வயது வாழ்கின்றது. அதற்காக அதனை வீட்டில் படுக்கையில் கொண்டு வந்து அருகே படுக்க வைக்க முடியாது என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள்.

எனக்கு குடும்பம், தொழில், எழுத்து இந்த மூன்றும் போதுமானது.  அங்கீகாரம் எதுவும் தேவையில்லை.  அது தேவையெனில் தேவையான இடத்தில் ஏதாவது ஒரு நாள் வந்தே தீரும். அல்லது நான் இறந்த பிறகு வரக்கூடும்.

பாரதி செய்த காரியங்களை நாம் செய்து உள்ளோமோ? தன்னை தீப்பந்தம் போல மாற்றி உலகத்தீரே இதனைக் கேட்பீர் என்று தன் குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அனைத்தையும் இழந்து குறுகிய காலத்தில் வாழ்ந்து முடித்து இறந்த போன அவரை ஒப்பிடும் போது நாமெல்லாம் சிறு தூசி. இதற்கு ஏனிந்த இத்தனை ஆர்ப்பாட்டம்? என்று நினைத்துக் கொள்வதுண்டு. 

பலரும் உங்களால் எப்படி தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது? அதுவும் பெரிது பெரிதாக எழுத முடிகின்றது என்று கேட்கும் போது இது தான் காரணம் என்று இங்கே இந்த சமயத்தில் எழுதி வைத்திடத் தோன்றுகின்றது. எது (மட்டும்) நமக்குத் தேவை? என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.  அது போதும்.  உங்களின் வளர்ச்சி இயல்பாக ஒரு நாள் உங்களை வந்தே தீரும்.  இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும், கடைப்பிடிக்கும் கொள்கை.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருப்பதில் உள்ள சிறந்த மற்றும் மோசமான விஷயங்கள் யாவை?

சுட சுட மட்டன் பிரியாணியை இலையில் வைத்தது போல ஒரு கேள்வி…..

இந்த கேள்விக்கு நான் விடை அளிக்கிறது தான் கரெக்ட் ஆஹ் இருக்கும்னு நெனைக்கிறேன்…. ஏன்னா…?நானெல்லாம் வீட்டுக்கு ஒரே புள்ளை….நோ அண்ணன் ,நோ அக்கா ,நோ தம்பி, நோ தங்கச்சி….

நானே ராஜா நானே மந்திரி…

சிறந்த பதில் …


நீங்க கேட்டது எல்லாம் கிடைக்கும்…(ட்ரெஸ், உணவு, ஸ்கூல் ,காலேஜ்)

எந்த தொல்லையும் இருக்காது(அண்ணா, அக்கா,தம்பி,தங்கச்சி)

சுதந்திரமாக இருக்கலாம்

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

பணிவிடை எல்லாம் கேட்காமலே வரும்…

உடம்பு சரி இல்லை என்றால் பிளாட்டினம் தட்டில் வைத்து தங்குவார்கள்…

ஒரே புள்ளை என்பதால் எல்லாத்துலையும் அக்கறை கொஞ்சம் அதிகமா இருக்கும்…

மோசமான விடயம்

படிக்கவில்லை என்றால் திட்டு அடி உண்டு…சரியாக சாப்பிடவில்லை என்றாலும் திட்டு உண்டு

2 பேரும்(அப்பா அம்மா)கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு கவனிப்பார்கள்…

தப்பு செய்தால் நிச்சயம் தண்டனை….

வீடுவேலை எல்லாம் செய்யணும்
ஸ்ட்ரிக்ட் ஆஹ் இருப்பாங்க….

எங்க போனாலும் வந்தாலும் சொல்லிட்டு போகணும்…

அவர்கள் வேலைக்கு போய்ட்டாங்கனா ,பேச்சு துணைக்கு கூட ஆள் இருக்காது..

ரொம்ப நேரம் tv, cell, எல்லாம் பார்க்கமுடியாது…..

அவ்ளோவ் தான் நெனைக்கிறேன்…..

நன்றியுடன்.....
வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​நீங்கள் எடுத்த எந்த முடிவுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள்?

1. திருமணம்: நான் நேசித்த சொந்த தாய்மாமன்  பெண்ணை திருமணம் செய்தது. நான் நேசித்த தாய்மாமன் பெண்ணை திருமணம் செய்து கொள்ள என் குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதில் நிறைய கஷ்டங்கள் மற்றும் தியாகங்களைச் செய்தேன், அவள் என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு காரணம், எனவே அவளை திருமணம் செய்து கொண்டது என் வாழ்க்கையின் முதல் சிறந்த முடிவு.

2. நேரமும் பணமும்: மொபைலில் இருந்து பேஸ்புக், ட்விட்டர், அமேசான் மற்றும் பிற ஷாப்பிங் பயன்பாடுகளை(ஆப்) நீக்கியது. பின்னர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரைப் பயன்படுத்துவதை நிறுத்தியது, இது நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த எனக்கு உதவியது. இரண்டாவது சிறந்த முடிவு.


3. புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியது: டிவி சேனல் சந்தாக்கள் மற்றும் அமேசான் பிரைம் சந்தாவை நிறுத்தியது. அதற்கு பதிலாக கின்டிலில் வரம்பற்ற புத்தகங்களுக்கு சந்தா செலுத்தி மாதத்திற்கு 5 புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியது . மூன்றாவது சிறந்த முடிவு.

4. பயணம்: நான் வருடத்திற்கு 3 முறை வெளிமாநில பயணம் செய்து உலகை தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பயணத்தின் மூலம் நான் வாழ்க்கையின் உண்மையான வண்ணங்களை உணர ஆரம்பித்தேன், மேலும் இயற்கையின் ஒவ்வொரு அழகையும் உணந்து அனுபவிக்க ஆரம்பித்தது. நான்காவது சிறந்த முடிவு.


5. வார இறுதி நாட்களில் எழுந்திருத்தல்: என்ன நடந்தாலும், எவ்வளவு தாமதமாக நான் தூங்கப் போனாலும். வார இறுதி நாட்களில் நான் எப்போதும் போல் அதிகாலையில் எழுந்து விடுவேன், இதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட நிறைய நேரம் கிடைக்கிறது.


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் இந்த 5 முடிவுகள், என்னை மகிழ்வித்து வாழ்க்கையை இன்பமையாகவும் புத்துணர்வுடனுடனும் வைத்திருக்க உதவுகிறது.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...


சனி, 16 நவம்பர், 2019

பொறியாளன்....
என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் நாங்கள் ....
எத்துணை துறைகள் இருக்கட்டும் அத்துணை துறைகளுக்கும் என்றும் துணை எங்கள் துறை ....
அதிக பெண் பிள்ளை கொண்டவர்கள் நாங்கள் ;
ஒவ்வொரு கட்டிடமும் எங்களுக்கு பெண் பிள்ளைதான் ....
பார்த்து , பார்த்து வளர்த்து கட்டிக்கொடுத்து( கட்டி) முடித்து தொலைவில் இருந்து ரசிக்கும் தருணம் ....!!!!
எங்கள் பிறப்பின் பலனை அடைந்த மகிழ்ச்சி ...!!
பலரின் வாழ்க்கை லட்சியம்,கனவு சொந்த வீடு ...
ஒட்டுமொத்த கனவையும் எங்கள் கைகளில் நம்பிக்கொடுத்துவிட்டுச் செல்வார்கள் .
கட்டி முடிப்பதற்குள் இன்னொரு பிறவி எடுப்போம்....
தாய் , சேயை பெற்றெடுப்பது போன்று
கட்டிடத்தை கட்டி முடிப்போம்..!!!
உயிர் பிறிந்து போகலாம் உடலைவிட்டு புகழ் மறைந்து போகாது இந்த மண்ணை விட்டு ....!!!
கடவுள் தூணிலும் இருப்பான் , துரும்பிலும் இருப்பான் .....
நாங்கள் தூணை கொடுத்தோம் ; துரும்பை தூணாகவும் கொடுத்தோம்.....!!!
மண்ணை வைத்து மனிதனை படைத்தான் கடவுள் ..!!
அதே மண்ணை வைத்து இருப்பிடம் படைத்தான் பொறியாளன்- கடவுளுக்கும்.
கொத்தனாரும்,சித்தாளும் கூட பொறியாளர் தான் - அனுபவ பொறியாளர் ;
என்றும் மதிக்க மறந்ததில்லை நாங்கள்.
திரும்பும் திசையெல்லாம் எங்கள் உழைப்பு வானுயர்ந்த நிற்கும்...!!!!
இந்த மண்ணும் எங்கள் சொத்து,
கிடக்கும் கல்லும் எங்கள் சொத்து,
கல்லும் , மண்ணும் , நீரால் ஆன பூமி;
இந்த புவியே எங்கள் சொத்து;
உறுதியேற்றோம் ;;;;
அழிக்க மாட்டோம் ; விளை நிலத்தை;
வீணாய்
கழிக்க மாட்டோம் ; பகல் பொழுதை..
இன்றைய ஒரு நாள்" என்பது தான் எனக்கு மிகவும் முக்கியம்.

இந்தக் கொள்கை தான் என்னை இன்று வரையிலும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனால் இன்று நான் செய்ய வேண்டிய வேலைகள், இன்றைய நிலையில் நான் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்? யாரெல்லாம் எனக்கு உதவி உள்ளனர் என்பதனை அவ்வப்போது பதிவு செய்துவிடுவது வாடிக்கை.  அதன் பொருட்டு இந்தப் பதிவு.

மகாகவி பாரதி முதல் நேற்று நீங்கள் பார்த்து வருத்தப்பட்ட பக்கத்து வீட்டுத் தாத்தா மரணம் வரைக்கும் யோசித்துப் பாருங்கள். தன் குடும்பம், தன் பெண்டிர் என்று வாழாமல் அதற்கு மேலாகத் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் சேர்ந்து வாழ்ந்த, வாழும் மனிதர்களை நம் சமூகம் எளிதில் அங்கீகரிக்க விரும்புவதில்லை. 

காரணம் மனிதர்களின் தோற்றமும் வளர்ச்சியும் நாகரிகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே வந்தாலும் அவனுக்குள் இருக்கும் பொறாமையும், வன்மமும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே, வெவ்வேறு விதமாக வளர்நது கொண்டே தான் வருகிறதே ஒழிய அது முற்றிலும் அவனை விட்டு மறைந்து விடுவதில்லை. 

மனிதர்களைக் கவனிப்பது ஒரு கலை.  எப்போதும் மகன்களிடம் நான் சொல்வதுண்டு.

கவனி.
கண்காணித்துக் கொள்.
கற்றுக் கொள்.

இந்த மூன்றையும் இறப்பு வரும் வரைக்கும் தொடர்ந்து கடைபிடி.


இது தான் வாழ்க்கை முழுக்க பயன்படும் என்று சொல்வதுண்டு.

வெள்ளி, 15 நவம்பர், 2019

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் எந்த மாதிரியான விஷயங்களை நாம் யாரிடமும் பகிரக் கூடாது?

உங்களின் சொத்து,வங்கியில் உள்ள பணம், வருமானம், நகை.

உங்களின் நோய். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், உங்கள் மருத்துவருக்கும் தெரிந்தால் போதுமானது.

உங்கள் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை, உங்கள் மனைவி, குழந்தைகள் பற்றிய முக்கிய தகவல்கள். உங்கள் மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாடு. இதை சொன்னால் அதில் இருந்து மற்றவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்ப்பார்கள்.

உங்கள் அலுவலகம் பற்றிய தகவல்கள். அடுத்த புராஜக்ட் பற்றிய தகவல்கள்.

உங்கள் அடுத்த வேலைக்கான தேடல்.

தனிப்பட்ட முறையில் ஒருவருடன் நடந்த மோதல்.

உங்களின் அரசியல் விருப்பு வெறுப்பு

உங்களது பழைய, மோசமான விளைவுகளை ஏற்படுத்திய செய்கைகள். அதை பேசி ஒன்றும் ஆக போவது இல்லை. ஆனால் மற்றவருக்கு ஒரு வாய் தீனி.
ATM நம்பர், வருமானவரி நிரந்தர கணக்கு, பின் நம்பர் எனப்படும் சொந்த அடையாள எண், உங்கள் வீட்டு/ நிலம் பத்திர நகல். இதை கொடுக்கும் போதும் அவர் சரியாக கையாளும் நபரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

வியாழன், 14 நவம்பர், 2019


ஐந்து முதலாளிகளின் கதை.....(எழுத்தாளர் திரு ஜோதிஜி திருப்பூர்)

இந்த டிஜிட்டல் லைப்ரரியில் முதன் முதலாய் வாசித்த புத்தகம் ஐந்து முதலாளிகளின் கதை.நம்ம பக்கத்து ஊரான திருப்பூரை சேர்ந்த எழுத்தாளரும், தொழிலதிபருமான திரு ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதிய ஒரு சுய முன்னேற்ற நூல் என்றும் கூட சொல்லலாம்.தம் வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவங்களை அழகாய் பதிய வைத்துள்ளார்.புத்தகம் எந்த ஒரு வர்ணனைகளும் இல்லாமல் மிக மிக சுவராஸ்யமாக செல்கிறது.எந்த சாயமும் பூசாத எதார்த்த வரிகளுடன் கொஞ்சம் வேகமாகவே செல்கிறது.

திருப்பூரின் கடந்த கால நிலைமை, தற்போதைய வளர்ச்சி, பனியன் கம்பெனிகளின் திடீர் எழுச்சி, தொழிலாளர் நலன், அவர்களின் வாழ்வாதாரம். வெளிமாநில தொழிலாளர்கள் வருகை, சாயப்பட்டறை வீழ்ச்சி, நொய்யலாற்றின் வீழ்ச்சி அரசாங்கத்தின் கவனிப்பின்மை என அனைத்தையும் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார்.

அதேபோல் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆங்கிலக் கலப்பின்றி இயல்பாய், அழகாய் விவரிப்பதற்கும் ஒரு தனித்திறமை வேண்டும். அது இவரிடத்திலே நிறைய இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்..

நான் ரசித்த "5 முதலாளிகளின் கதை" புத்தகம் குறித்தொரு பார்வை...

குமார் எனும் கோடிகளில் புரண்ட முதலாளி இறுதியில் தன் வாழ்வைத் துவங்கிய இடத்தில் போய் நின்ற கதையைச் சொல்கிறது இப்புத்தகத்தின் முதல் கதை. பெண் பித்துப் பிடித்துத் திரிந்தால் குபேரனும் குப்பைக்குத் தான் செல்வான் என்பதைச் செவுளில் அறைந்து செல்கிறது இக்கதை. அவர் வாழ்வில் புகுந்த ஒரு விஜயா போல் தொழில் நகரங்களில் பல விஜயாக்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தென்றலாக வருவர் தீயாக மாறி வாழ்வைப் பொசுக்குவதற்கு.

இது தென்றல் அல்ல தீ என்பதை யார் உணர மறுக்கிறார்களோ அவர்கள் பட்டே திருந்துவார்கள்.

அவர்கள் திருந்தித் திரும்பிப் பார்க்கும் போது தான் சம்பாதித்திருந்த பணம், புகழ், பெயர், சொத்து, குடும்பம், குழந்தைகள், உடல் நலன் அத்தனையும் அவர்களை விட்டு காத தூரம் ஓடியே போயிருக்கும் என்பதைச் சுட்டெரிக்கும் சூரியனாய் விளக்குகிறது இக்கதை.

விஜயா விரித்த வலையில் சிக்காத இருபத்தி மூன்று வயது இளைஞனான ஜோதிஜி அண்ணன் எனக்குச் சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் தளுக்கும் குலுக்குமான பேரழகி அநங்கமா வீணையிடம் சிக்காத சோணகிரியாகவே தெரிந்தார்.

இக்கதை மது, மங்கையிடம் மயங்கினால் என்னாகும் எனும் உளவியலை விளக்குகிறது நமக்கு.

1992 ல் திருப்பூரைப் பற்றியோ ஆடை உற்பத்தி தொழிலைப் பற்றியோ எதுவும் தெரியாமல் உள்நுழைந்தவர் 1997 ஆம் வருடம் திருப்பூரையும், ஆடை உற்பத்தி தொழிலையும் கரைத்துக் குடித்து தன் தகுதியை உயர்த்திக்கொண்டு புரொடெக்சன் மேனேஜர் பதவிக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்வதிலிருந்து இரண்டாம் கதை துவங்குகிறது.

தன்னுடைய நேர்முகத் தேர்வின் அறிமுகம் மூலமே தன்னை அடையாளம் கண்டு தன் வேகம் பிடித்துப்போய் வேலைக்குச் சேர்த்தார் அந்த முதலாளி. நல்லவர், நம்பிக்கையானவர், தன்னிடம் விதைத்த நம்பிக்கையை எவ்வகையிலும் கெடுத்துக்கொள்ளாதவர், தன் வேலையில் குறுக்கிடாதவர் எல்லாம் சரி தான் ஆனால் அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். நல்லதோ கெட்டதோ சில விசயங்களை மனம் ஏற்றுக்கொள்ளாது. மனம் ஒப்பாத இடத்தில் இருக்கப் பிடிக்காது யோசிக்காது முடிவெடுக்கச் செய்து விடும். அப்படி அந்நிறுவனத்தை விட்டு வெளியே வந்துவிடுகிறார் ஆசிரியர்.

ஒரு தொழில் நகரத்தில் தான் எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான மனித குணங்கள், முகங்கள்.

மூன்றாம் கதையில் ஜெனரல் மேனேஜர் பதவி தேடி வந்தது, தேனமுதாக இனித்தது. பெரிய பதவி, பெரிய நிறுவனம், தொழில் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்வது, வளர்வது யாருக்குப் பிடிக்காது அப்படி விரும்பிப் போய் மாட்டிக்கொண்டது தான் இந்த மூன்றாம் முதலாளியிடம். 1990 களில் ஜோதிஜி அண்ணனின் கல்லூரி காலங்களில் இன்டியா டுடே பத்திரிக்கையில் திருப்பூர் ஆடை நிறுவனங்களில் முதல் பத்து இடங்களில் இருக்கும் நிறுவன முதலாளிகளுள் ஒருவர் என்பதற்காய் அவர் புகைப்படத்துடன் கூடிய பேட்டி வெளிவந்திருந்தது.

அதை நேர்முகத்தேர்வின் போது அவருடன் சொல்லி மகிழ்ந்தார். ஒரு காலத்தில் தன்னுடைய ஆதர்ஷ நாயகர்களில் ஒருவரான முதலாளியிடம் வேலை செய்யப்போகிறார் அதுவும் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கப் போகிறார். அவரிடம் நம்பிக்கை, எதிர்பார்ப்போடு சென்றால் அதற்கு நேர் எதிராய் பணப்பேயாக இருக்கிறார் அவர். எல்லாம் எனக்கு வேண்டும் எனும் பேராசையில் வேலை செய்ய யாருமின்றி நிறுவனம் காத்தாடிக்கொண்டிருந்தது. மெசின்கள் தொட ஆளின்றி தூசி படித்துக் கிடந்தது.

சரிந்து கிடந்த அத்தொழில் நிறுவனத்தை புனரமைத்து மீண்டும் இயங்க வைப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் சொந்த முயற்சியால் அந்நிறுவனத்தைக் கட்டி எழுப்பி லாபத்தைக் காட்டினால் அது முதலாளிக்கு பத்தவில்லை. கொடுக்க வேண்டியவர்களுக்குப் பணம் கொடுக்க விருப்பமில்லை. புதிய முதலீடுகளில் பணம் போட மனமில்லை. மனைவி, மகன், மகள் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவிக்க ஆசை வாங்கிக்குவித்தார்.

தொழிலாளிகள், கான்ராக்டர்கள், சிறு முதலாளிகள் என அத்தனை பேரையும் ஏய்த்தும் பொய்த்தும் உருவாக்கிய தன்னுடைய தொழில் சாம்ராஜ்யம் என்ன ஆனது? அநியாயமாய் சம்பாதித்த பணம் தங்குமா என்ன? கற்பனையினூடே அல்ல தன் வாழ்வியல் அனுபவத்தினூடே இக்கதையில் விளக்குகிறார் ஆசிரியர்.

பேராசை பெருநஷ்டம் சொல்கிறது இக்கதை.

திருப்பூரில் தன் வீட்டில் வைத்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தேடி வந்த தென்றல், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வழியாகப் புயலாக மாறியதை தன் புயல் வேக எழுத்து நடையால் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். எங்கோ நடக்கும் நிகழ்வுகள் நம் வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை இக்கதை மூலம் அறிய முடிந்தது. லிபியாவில் கடாபி வீழ்ந்தது தெரியும்.

ஆடைகளை கன்டெய்னரில் லிபியாவிற்கு அனுப்பிவிட்டு இங்குக் காத்திருந்த ஜோதிஜி அண்ணனைப் போல் எத்தனை பேர் கனவுகள் லட்சியங்கள் வீழ்ந்ததோ யாருக்குத் தெரியும். இவர் எழுதியதால் நமக்குத் தெரிந்தது. தெரியாமல் எத்தனை எத்தனையோ பேர் வீழ்ந்திருக்கக் கூடும் என்பதைச் சொல்கிறது இக்கதை.

விதியின் முன் மதி சில நேரம் மண்டியிடத்தான் செய்கிறது.

"எனக்கு இனி பணம் தேவையில்லை திருப்தி தான் முக்கியம்" இதைச் சொன்ன முதலாளி தான் இந்த ஐந்து முதலாளிகளின் கதைக்கு நாயகன் என்று நான் கருதுகிறேன். போதும் எனும் இடத்திலே லட்சுமி நிரந்தரமாய் குடியிருப்பாள் என்பதை தன் வாழ்வு மூலம் நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியார் இந்த முதலாளி.

நேர் வழி, அகலக் கால் விரிக்காத குணம், கடுமையான உழைப்பு, கொடுக்கல் வாங்கலில் வெளிப்படைத் தன்மை, சீரான முன்னேற்றம், தொழில் நுட்பம் புரியவில்லை விடு, தெரிந்ததைத் தெளிவாகச் செய்யும் அறிவு, அத்தனைக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருத்தல், அதைப் பாதுகாத்தல், எல்லாத்திற்கும் மேல் போதுமென்ற மனம் இது இருந்தால் போதும் இந்த முதலாளி போல் வெற்றி பெறலாம் தொழிலில் மட்டுமல்ல வாழ்விலும் தான்.

மது, மாது, புகழ் மயக்கத்தில் விழாது வெற்றியைத் தக்க வைத்த முதலாளியின் வாழ்வு நமக்குள் தன்னம்பிக்கை வளர்க்கும் விதை இக்கதை.

புத்தகம் என்பது வெறும் பொழுது போக்கல்ல அது நம் வாழ்க்கை பாதையை மடை மாற்றிவிட வல்லது. நம்மை மாற்றி யோசிக்க வைப்பது. புதிதாகச் சிந்திக்க வைப்பது. புதிதாய் வாழக் கற்றுத்தருவது. இப்புத்தகம் இவை அத்தயையும் ஒருங்கே நமக்குத் தருகிறது.

இது ஒரு நம்பிக்கை நூல். நமை நல்வழிப்படுத்தும் நூல். தொழில் முனைவோராய் மாற்ற முயலும் நூல். நம் உள்ளத்தில் உள்ள எதிர் மறை எண்ணங்களைத் துடைத்தெறிந்து நேர்மையாய் நெஞ்சுறுதியாய் வாழ்ந்தால் எழலாம் லயிக்கலாம் என்பதைச் சொல்லும் சுய முன்னேற்ற நூல். இந்த புத்தகம் பலரிடம் போய்ச் சேர வேண்டும். அவர்கள் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். திருப்பூருக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொருவருக்கும் பாதை காட்டும் கலங்கரை விளக்கம் இந்த நூல்.

இச்சிறந்த புத்தகம் போட்டியில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும் எனில் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்யுங்கள், முழுமையாய் படியுங்கள், ஐந்து நட்சத்திர குறியீட்டை வழங்குங்கள். உங்கள் விமர்சனங்களை ஆங்கிலத்தில் தாருங்கள். நல்ல ஒரு புத்தகத்தை நீங்களும் நாலு பேருக்குச் சொல்லுங்கள். உங்கள் அனுபவங்களைப் படையுங்கள் படைத்து இது போன்று மற்றவர்களும் பயன்படும் வண்ணம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதற்கு உங்களை ஊக்கப்படுத்தும், தொழில் முனைவோராய் மாற்ற உற்சாகப்படுத்தும் உன்னத வேலையைச் செய்யும் இப்புத்தகம்.
அன்புடன்,
கொல்லால் எச். ஜோஸ்


செவ்வாய், 12 நவம்பர், 2019

2001 வருஷம் எனக்கு ப்ருனேல வேலை கிடைச்சது... ஆனா பாஸ்போர்ட், விசா, மற்றும் சில பிரச்சனைகள் காரணமா போகமுடியலை... குறிப்பா பாஸ்போர்ட் வாங்க அப்போ பட்ட அவஸ்தைகள் ரொம்ப அதிகம்... கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கி கடைசில, பார்த்துகிட்டு இருந்த வேலையும்,ப்ருனே போறதும் கேன்சலாகி போயி வீட்ல சுமார் ஆறு மாசம் வெட்டியா இருந்தேன்... வழக்கம் போல திட்டு...தண்டசோறுன்னு திட்டு வாங்கினாலும் நான் உருப்பட திட்டின வார்த்தைகள்... அப்போ ஒரு நாள் என் கசின் அமெரிக்கா போகும் போது சொல்லிட்டுப் போக வீட்டுக்கு வந்திட்டு போனாங்க... அப்போ நான் தூங்கிட்டேன்னு நினைச்சு அம்மா கிட்ட அப்பா ஆசையா, ஏக்கமா சொன்னது, என் பசங்களும் இப்படி வெளிநாடு போய் நல்லா சம்பாதிக்கணும்... நல்ல நிலைமையில இருக்கணும்... எனக்கு ரொம்ப ஆசைன்னு... அப்போ கேட்ட அந்த குரல்ல இருந்த ஏக்கம் என்னை ரொம்ப பாதிச்சது... எப்படி எப்படியோ போராடினாலும் பலன் பூஜ்யம்...
வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு வந்து படிச்சுகிட்டே பார்ட் டைம் வேலை பார்த்த அண்ணாவுடன் சேர்ந்தாச்சு... அத்தோட அப்பாகிட்ட செலவுக்கு பணம் வாங்குவது நின்னிடுச்சு... வேலை தேடும் படலம்... கஷ்டப்பட்டு ஒரு வேலை கிடைச்சது... ஆனா வேலைல சேர வண்டி கண்டிப்பா வேணும்ன்னு கண்டிஷன்... அப்பா கிட்ட இருந்தது டிவிஸ் 50. சொன்னவுடனே யோசிக்காம ரயில்ல அனுப்பிவிட்டாங்க... அதே வண்டியில ஒருநாளைக்கு எண்பது கிலோ மீட்டர் ஓட்டுவேன்...கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சர்வீஸ்... திருவண்ணாமலை கோவில் போன அப்பா அங்கயே திடீர்ன்னு மறைவு... நிலைகுலைஞ்சு போனோம்...
அப்படி, இப்படின்னு கொஞ்ச நஞ்ச கஷ்டத்தில மனசுல ஒன்னே ஒண்ணு மட்டும் உறுத்திகிட்டே இருந்துச்சு... வெளிநாடுல போய் வேலை செய்யணும்ங்கிற அப்பாவோட ஆசை... ஒரு நாளைக்கு ரெண்டு மூணு மணிநேரம் தான் தூங்குவேன்... எப்படி எல்லாம், எதெல்லாம் படிச்சா நல்ல சம்பளம், பெரிய கம்பெனி போலாம், எப்படி வெளிநாடு போலாம்ன்னே மனசுல எண்ணம்... சுமார் நாலு வருடம் ஆச்சு... 2007 ல ஆகஸ்ட் 27ல முதன்முறையா அமெரிக்கா கிளம்பினேன்... கிளம்பின அன்னிக்கு காலைல டிவில ஒரு பாட்டு "கனவெல்லாம் பலித்ததே"ன்னு... பாத்ரூம் போய் ஷவர் ஆன் பண்ணிட்டு வெடிச்சு அழுதேன்... எங்கப்பா ஆசீர்வாதம் பண்ணின மாதிரி ஒரு திருப்தி... அப்புறம் இந்தியா வந்தாச்சு... கல்யாணமா...? அமெரிக்காவா..?ன்னு வந்தப்போ உறுதியா சொன்னேன் எங்கப்பாவோட ஆசைப்படி அமெரிக்கா தான்னு சொல்லி திரும்பி ட்ரை பண்ணி கிட்டத்தட்ட போராடி இங்க வேலை கிடைச்சு வந்தேன்...
எனக்கு தெரிஞ்சு எங்கப்பா சிகரெட் குடிச்சோ, தண்ணி அடிச்சோ, அசைவம் சாப்பிட்டோ நான் கேள்வி பட்டது கூட இல்லை... இங்க வந்தாலும் நானும் அப்படியே...

அப்பா ஐ லவ் யூ, ஹாப்பி பாதர்ஸ் டே, அப்படின்னு ஒரு நாள் மட்டும் சொல்லாம உங்கப்பாவோட நியாயமான, உங்கனால முடியும்ன்னு நடைமுறைக்கு சாத்தியமான எந்த ஆசையை நிறைவேத்தி வைச்சு, அப்பா பேரை கெடுக்காம இருக்கிற ஒவ்வொரு நாளும் #தந்தையர்_தினம் தான்... இது ஒரு நாள் மட்டும் இல்லை... வாழ்நாள் முழுதும்... இருக்கும் போது விட்டுட்டு போன பின்னாடி பிடிச்சதெல்லாம் வாங்கி படத்துக்கு வைக்கிரதுல அர்த்தமே இல்லை..! அப்பா, அம்மா மனசு நிறைஞ்சு "நல்லா இரு"ன்னு சொன்னாலே போதும்...

நெஞ்சில், தோள்களில் பிள்ளைகளை பிறந்ததிலிருந்து சுமந்து வாழும் அனைத்து தகப்பன்சாமிகளுக்கும் பாதம் தொட்டு வாழ்த்துக்கள்..! அப்பாவாக ஆகப்போகும் அனைவருக்கும் "உங்க பிள்ளைங்களுக்கு" நீங்க தான் வழிகாட்டி, கதாநாயகன்... நல்லனவற்றை வாழ்ந்து காட்டி வாழ்க்கையை புரியவைக்கும் உங்கள் கடமையை செவ்வனவே செய்ய வாழ்த்துக்கள்..!
கோவை மாநகரம் ......



தொழில் துறை அபார வளர்ச்சிக்கு வித்திட்ட தொழிலதிபர்கள்  ....


தொழிலதிபர்களை உருவாக்கிய பத்து முத்தான உடுமலைப்பேட்டை கிராமங்கள் ...


1.கணபதிபாளையம்...

2.பொட்டையம்பாளையம்

3.முருங்கப்பட்டி

4.அடிவள்ளி

5.பெதப்பம்பட்டி

6.சனுப்பப்பட்டி

7..தளிஜல்லிபட்டி

8.போடிபட்டி

9,.ராகல்பாவி

10..வாளவாடி ...👍⛱⛱⛱⛱
உறவுகள்,,, தொடர்கதை!!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, வேகமான நகர வாழ்க்கை .. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன்.

 சமீபத்தில், என் மச்சினன்  வீட்டு பொண்ணு  விழாவுக்குப் போயிருந்தேன். மச்சினன் வீட்டு மூன்று தலைமுறை உறவுகளோடும்  இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தாதாரு . அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான்  ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
 - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

 ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ' என்று யநெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!