45.....வயதினிலே
அப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும் நான் யோசிப்பதுண்டு. நம்பிக்கைகளுடன் தொடங்கும் திருமண வாழ்க்கை அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றி அடைந்ததாகச் சொல்லி விட முடியாது. முன்பு வெளியே தெரியாமல் இருந்தது. இப்போதும் அனைத்தும் வெளியே வந்து விடுகின்றது.
பொருத்தங்கள் என்பதனை அவரவர் நம்பிக்கைகள் வைத்துத் திருமணத்திற்கு முன்பு பார்த்தாலும் வாழும் சூழல் என்பதும், அவரவர் வளர்ந்த விதங்களின் காரணமாகப் பொருந்திப் போவதில்லை. பணம் இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுக்காத தம்பதியினரும், எல்லாமே இருந்தும் வெவ்வேறு துருவமாக வாழும் வாழ்க்கை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.
தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகின் மறுபுறம் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அடுத்த நொடியில் நம் பார்வைக்கு வந்து விடும் இந்த நேரத்தில் அந்தரங்கம் என்பதே இல்லாத சூழலில் நம் அனைவரின் செயல்பாடுகளும் ஏதோவொரு வழியில் வெளியே வந்து விடுகின்றது. பொத்திப் பொத்தி பாதுகாத்த குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் ஏதோவொரு சமயத்தில் பொது வெளிக்கு வந்து விடுகின்றது. திருமணம் முடிந்து சில வருடங்களில் அவரவர் குணாதிசியங்கள் முழுமையாக வெளியே தெரியத் தொடங்கும் சமயத்தில் தான் குழந்தைகள் குடும்பத்தில் வந்து சேர்கின்றார்கள்.
அரசியல், நிறுவனம், அமைப்புத் தொடங்கிக் குடும்பம் வரைக்கும் நம் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் எவரோ? அவர்களைத் தான் நாம் விரும்பச் செய்கின்றோம். நாம் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அனுமதிக்கவும் மாட்டோம். இது நேற்று இன்றல்ல. வாழையடி வாழையாக வந்த மரபு சார்ந்த பிரச்சனை. ஆனால் உலகம் வளர்ந்ததும், வளர்ந்த உலகத்தில் மாறிய நாகரிகத்திற்கும் முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியக் காரணமென்பது மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதே.
மற்ற நாடுகளை விட நம் குடும்ப அமைப்பு வலிமையானது, நெறிமுறையான வாழ்க்கையை நமக்குத் தந்தது என்பதனை நாம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் இந்த வலிமை என்ற வார்த்தைக்குள் வெளியே தெரியாத அடக்குமுறை இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தான் காலம் காலமாக இந்த அமைப்பைக் கொண்டு செலுத்திக் கொண்டு வந்தது. "அப்பா சொன்னது தான் இறுதி முடிவு" என்ற நிலையில் இருந்த குடும்ப வாழ்க்கை இப்போது மாறி விட்டது. "அம்மா முடிவெடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்பது இப்போது பாரபட்சமாகப் பார்க்கப்படுகின்றது.
காலம் ஒவ்வொரு சமயத்திலும் பலவிதமான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே தான் வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழல் கடந்த எந்த நூற்றாண்டிலும் கண்டிராத மாற்றங்களை, நம்பமுடியாத ஆச்சரியங்களைக் கொண்டு வந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. கடந்து சென்ற மாற்றங்கள் அனைத்தும் மனித மூளையின் மூலம் நடந்தது. இப்போது எந்திரங்கள் மூலம் நடக்கின்றது.
சிலருக்குப் புரட்சியாகப் பலருக்கு மிரட்சியாக உள்ளது. ஆச்சரியமாகத் தெரியும் பல மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அவலமாகவும் தெரிகின்றது.. எது சரி? எது தவறு? என்பதனையெல்லாம் மீறி இவையெல்லாம் எனக்குத் தேவை? இது என் பார்வையில் சரிதான் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றோம். நடந்த மாற்றத்திற்கு யாரோ ஒரு தலைவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதில் பொது நலம் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நபரும் மாற்றத்திற்கான காரணமாக இருக்கின்றார்கள்.
சூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது. மாற்றங்கள் என்ற பெயரில் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றிலும் உள்ள சுயநலம் உள்ளே இருப்பதைத் தெரிந்தே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் நமக்கான வாய்ப்பைத் தேடுகின்றோம். அதையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கின்றோம். இது நேரிடையாக மறைமுகமாக ஒவ்வொருவர் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை உருவாக்குகின்றது.
இங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது.
எதனால் இது நடந்தது? என்பதனை யோசிக்கும் முன்பு இருப்பதை இழந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. உழைப்பு என்பதின் வரையறை மாறியுள்ளது. முடிவெடுக்கும் திறனில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது என்று அறிவுரையாகப் போதிக்கப்படுகின்றது. முதல் முடிவு மாறும் போது அடுத்த முடிவுக்குச் செல்ல வேண்டும் என்று பாடங்களை உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சோர்ந்து போனவன் பின்னுக்குச் சென்றுவிடக் காரணக் காரியத்தைச் சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனின் உலகமாக மாறியுள்ளது.
இந்த இடத்தில் தான் மற்றொரு பிரச்சனை உருவாகின்றது. நம் தாத்தா அப்பாவைக் குறை சொன்னார். அது அப்பாவின் அணுகுமுறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று நாம் மகன்,மகள்களைக் குறை சொல்கின்றோம். அது அவர்களின் மாறிய பழக்கவழக்கங்கள் குறித்தே இருக்கின்றது. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது,
ஐம்பது வயதாகியும் கற்ற அனுபவங்கள் எதுவும் நமக்கு உதவவில்லையே? என்ற ஆதங்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமலும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒன்று சேர்ந்து அழுத்தச் சமாளிக்க முடியாமல் தடுமாறத் தொடங்குகின்றோம்.
தலைமுறை இடைவெளி என்பது எல்லாச் சமயங்களிலும் உருவாகின்ற ஒன்று தான். ஆனால் மாற்றத்தின் காரணமாக உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் பின்னாலும் ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. நான் முக்கியம். என் வாழ்க்கை மற்ற அனைத்தையும் விட முக்கியம். இந்தக் கேள்வி குடும்பத்தில் உருவாகும் போது, மகள், மகள் வாயிலிருந்து வார்த்தைகளாக வரும் போது தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தான் தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கின்றது.
சுதந்திரம் என்ற பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. அதன் வரையறை குறித்து யாருக்கும் கவலையில்லை.
இங்கேயிருந்து உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கையில் அதிகளவு தடுமாற வைக்கின்றது. காரணம் நம் வாழ்க்கை முறையின் அமைப்பு அந்த அளவுக்கு நேசம், பாசம் போன்ற வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கலந்திருப்பதால் அதன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் மரண வாதையாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்குரிய சொத்துக்களை மட்டும் சேர்ப்பதில்லை. அதில் ஒரு அங்கமாகக் குழந்தைகளையும் வைத்துள்ளனர்.
அவர்கள் திருமணம் ஆகி வேறோர் இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெற்றோர்களுக்கு மரணம் வரைக்கும் பழி சொல்லாகவே உள்ளது. இந்த வாழ்க்கை முறையில் தான் தற்போது உருவாகியுள்ள மாற்றங்கள் பேரிடியை நிகழ்த்தி உள்ளது.
குறிப்பாகப் பெண்கள் குறித்த பார்வையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் சிந்தனைகள் மாறிய சூழலில் காலாவதியாகி விட்டது என்பதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். பெற்றோர்களும், கணவனும் தான் வாழ்க்கை என்ற தத்துவம் மாறி அவர்கள் கற்ற கல்வி நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலைகள் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. வட்டத்திற்குள் நின்றவர்கள் வெளியே வந்து விடச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தடுமாறத் தொடங்குகின்றார்கள்.
கூட்டுக்குள் அடங்காத பறவைகளில் பாய்ச்சல் இங்கே பலருக்கும் பயமுறுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி நான் வாழ்வது என் குழந்தைகளுக்காகவே என்று வாழ்ந்த பெற்றோர்களுக்குப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.
பற்றாக்குறை என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பது வயதில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
வாங்கும் சம்பளம், கற்றுக் கொள்ள முடியாத நுட்பங்கள், விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடல் ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலும் ஏதோவொரு இடத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் பற்றாக்குறை இருந்தே தான் தீரும். முழுமை என்பது மனதோடு சம்மந்தப்பட்டது என்றாலும் அது உணர முடியாத சூழல் தான் நம்மைக் கொண்டு செலுத்துகின்றது. வெறும் வார்த்தைகளும், வாசிப்புகளும் இவற்றைத் தந்து விடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது.
நிஜமென்பதும் எதார்த்தமென்பது சூட்றெரிக்கும். நேசித்தவற்றை விட்டு விலக முடியாமலும் நிஜமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அனுதினமும் தடுமாறும் சமயங்களில் உடன் இருக்கும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாதபட்சத்தில் நொடிக்கு நொடி மரண அவஸ்தை தான்.
ஆண், பெண்ணின் அங்கீகாரமென்பதைத் திருமணம் என்று இங்குள்ள சமூகச் சூழல் தீர்மானித்து வைத்துள்ளது. அதுவே அவரவர் வாழ்வில் குழந்தைகளின் வரவுக்குப் பிறகே முழுமையடைவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளது.
தவமாய்த் தவமிருந்தேன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தருபவர்கள் பிறக்கும் குழந்தைகளை வரம் தந்த சாமி போலப் பார்க்கப்படுகின்றார்கள். மகன்களை அடைந்தவர்களின் பார்வையும் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நோக்கமும் சமூகத்தால் வேறு விதமாகப் புரிய வைக்கப்படுகின்றது. எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் அழுத்தங்கள் என்பது வாழும் வரைக்கும் படிப்படியாக அவரவர் மனதிற்குள் புகுத்தப்படுகின்றது. இதனையே இங்குள்ள கலாச்சாரம், கடமை என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.
குழந்தைகள் வந்தவுடன் அங்கீகாரம். வளரத் தொடங்கும் போது மகிழ்ச்சி, வாழ்க்கையைத் தொடங்கும் போது கடமை நிறைவேறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு சமயத்திலும் இல்லாத தலைகீரிடத்தில் ஒரு பூ சூட்டப்படுகின்றது. பாசம் சேர்த்துப் பக்குவமாகச் சமைத்த சமையல் பலசமயம் குலைந்து போகின்ற சமயத்தில் மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையிருமாகத் துடித்துவிடுகின்றது.
இவையெல்லாமே ஐம்பது வயதில் தாக்கும். தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றதோ இல்லையோ சமூகத்தால் கேலியாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்தவர்களின் பார்வையில் நாம் எப்படியிருக்க வேண்டும்? என்று உருவாக்கியிருந்த கட்டுமானம் உடைபடும் போது அணை உடைந்து வெளியே தாறுமாறாகப் பாயும் வெள்ளநீர் போல ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.
நாம் வாழுமிடம் பொறுத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நாமே ஒவ்வொரு பெயர்களைக் கொடுத்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மகள், மகனின் கல்வி, குடும்ப வாழ்க்கையென்பது அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற நோக்கமே இன்னமும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாக உள்ளது. இது பெற்றோர்களின் உளவியலைச் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்துகின்றது.
இந்தச் சமயங்களில் தான் அப்பாக்களின் ஆதிக்கம் நொறுங்கிப் போய் விடுகின்றது. அம்மாக்களின் வாழ்க்கையென்பது நான் வளர்த்த விதம் தவறா? என்று கூனிக்குறுகி விட வைக்கின்றது.
இன்றைய சூழலில் கடினமானதும், சவாலானதும், ஒருவரை சாதனையாளராகக் காட்டுவதும் அவரவர் குழந்தைகள் வளர்ப்பு தான் என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.
பணம் சேர்த்து வாழ்வில் வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் குடும்பம் முதல் மிகச் சாதாரணக் குடும்பம் வரைக்கும் இன்று நீக்கமற நிறைந்திருப்பதும் சந்ததிகள் சார்ந்த பிரச்சனைகள் தான். தகுதியான வேலை கிடைக்கவில்லை என்பதில் தொடங்குகின்றது. தரமான தொடர்பில்லாமல் தரங்கெட்டு அலைகின்றானே என்பது வரைக்கும் சொல்லித் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இங்கே ஏராளமுண்டு. இதற்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் சுனாமியை உருவாக்கிக் கொண்டிருப்பது காதல் என்ற வார்த்தை.
நம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் வென்றவர்கள் தோற்றவர்கள் நம் முன் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள். சந்தர்ப்பங்கள் மீண்டும் சரியாக அமைந்தால் மீண்டு வரக்கூடிய வாய்ப்பதிகம். மீண்டு வந்தவர்களும் நம் முன்னால் ஏராளனமான பேர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது?
நாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும் நம் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் ஒப்பு நோக்கி விடுவோம்.
நேற்று கூட ...ஒரு தந்தையின் பாசத்தை கேட்க முடிந்தது ...தந்தை ..ஒரு இறப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறார் ...அங்கு தான் பெற்ற மகனை காண்கிறார் ..நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தை பார்க்க எத்தனிக்கிறார் ...தன் தாயுடன் தற்பொழுது வாழும் மகன் ..பயத்துடன் தன் முகத்தை வேறுபக்கம் பார்த்துக்கொண்டு உள்ளார் ...அந்தஇறப்பு வீட்டுகுள் சென்று வருவதற்குள் தன் தாயும் ,தாயின் குடும்பத்தினர் மகனை வேறுபக்கம் பார்க்க முடியாமல் அனுப்பி விடுகின்றனர் ...அந்த பிஞ்சு மனதில் எப்படி விஷத்தை ஊற்றி வளர்க்க முடிகிறது ...தற்பொழுது தங்களின் சுயநலத்துக்கு குழந்தைகளை எப்படியும் வளைக்க முடிகிறது ..சமூகம் கற்றுத்தரும் பாடம் இது தானா ...சிலருக்கு புரிவதில்லை ...இந்த வளர்ப்பு முறையே பிற்காலத்தில் அவர்களை தாக்கும் என்று தெரிவது இல்லையென்று ...கண்முன்னே சிதிலடைந்த கட்டிடங்கள் கற்று தரும் பாடங்களை கற்றுக்கொள்வதில்லை ...காலம் கற்றுக்கொடுக்கும் ..
காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது?
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....முகநூல் sivakumar kumar ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக