செவ்வாய், 26 ஜனவரி, 2021

 இன்று அருமையான திருமண விழா ....

பொள்ளாச்சி கொல்லப்பட்டி -ராமநாதபுரம்மாவட்டம் -வள்ளக்குளம் 


அருமை தம்பி அருள் பிரகாஷ் -முத்துப்பிரியா ..பொள்ளாச்சி புளியம்பட்டி பொம்மீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழா ..நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம திருப்தியுடன் பொறுமையாக ..(அவசர உலகம் ) சில சொந்தங்களுடன் உரையாடிவிட்டு ..இரவு உணவு வயிற்றுக்கு ருசியுடன் பசித்து ,ரசித்து  மனதிற்கு நிறைவாக சொந்தங்கள் பரிமாறிய உணவு சாப்பிட்டது அருமை...புதுமணமக்களுக்கு வாழ்த்திவிட்டு வந்தது இன்றைய நாள் சிறப்பு ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681.. 

புதன், 20 ஜனவரி, 2021

 கேள்வி : வீட்டு கடன் பாக்கி தொகையினை மொத்தமாக ஒரே தவணையில் சுமார் 4 அல்லது 5 லட்சம் செலுத்தி கடனை அடைக்கலாமா. அச்சமயம் ஏதாவது concession in interest அல்லது தொகை குறைப்பு கிடைக்குமா?


என் பதில் :....

இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்லுமுன், வீட்டுக்கடன் பற்றிய சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்வோம்:

உங்கள் மாத வருமானத்துக்கேற்ற மாதிரி வீட்டுக்கடன் வாங்கவும். முடிந்த வரை வீட்டின் மதிப்பில் 30% வரை கையிருப்பிலிருந்து தேத்தி விடவும். சில தேசிய வங்கிகள் வீட்டின் மதிப்பில் 80% தான் கடனே வழங்கும்.

எல்லா வங்கிகளும், வீட்டுக் கடன் என்னவோ 20/30 வருடங்களுக்கு தருவார்கள். அதற்காக 20வது வருடம் தான் கட்டி முடிப்பேன் என்று சபதம் எடுக்காதீர்கள்.

எந்த வங்கியாக இருந்தாலும், நாம் கட்டும் மாதாமாதம் இ.எம்.ஐ(EMI) என்ற தொகையில் பெரும்பகுதியை, வாங்கிய கடனின் வட்டிக்குத் தான் பிடித்துக் கொள்வார்கள்.

எ.கா: EMI இருபதாயிரம் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதில் 80% அதாவது 16 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு போயிடும், மீதி 4 ஆயிரம் அசலுக்கு.

இது பெரிய தேவ ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் மாதாந்திர வீட்டுக்கடன் அறிக்கையில், வங்கிகள் தெளிவாக அனுப்புவார்கள்.

காரணம், நீங்கள் 20 வருடம் கட்டப் போகும் வட்டி தான், அந்த வங்கியின் வருமானம். எனவே வட்டியைத் தான் முதலில் வசூலிக்க நினைப்பார்கள். எனக்கு தெரிந்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் Concession in Interest தருவதில்லை.

ஆகவே, உங்களுக்கு ஏதேனும் அலுவலக போனசோ அல்லது திடீரென்று பூர்வீக சொத்து விற்றதில் உங்கள் பங்காக, கணிசமான தொகை கையில் வந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக் கடனில் அந்த பணத்தை, எந்த அபராதமுமின்றி சேர்ப்பிக்க முடியுமா? என்று முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் மனசு மாறுவதற்குள், அல்லது

"ஜி.ஆர்.டியில் வளையல் திருவிழா நடக்குது. ஆர் யூ ஓகே பேபி?" என்று நயன்தாரா கேட்பதை பார்த்து, நீங்கள் மனசு மாறுவதற்குள், உடனே சென்று கட்டி விடுங்கள்.

இதனால் உங்களுக்கு என்ன லாபம்?

நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் 25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதில் ஐந்து லட்சத்தை கட்டி விட்டால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ அப்படியே இருக்கும், ஆனால் வீட்டுக் கடனின் கால அளவு (மாதங்கள்) குறைந்து விடும்.

இப்படியே வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என கணிசமான தொகையை செலுத்தி வாருங்கள்.

கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், எட்டு வருடத்தில் அதிக வட்டி கட்டிக் கொண்டிருக்காமல், உங்கள் முழு வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம்.

இது எனது சொந்த அனுபவம். எட்டு வருடத்தில் வீட்டுக் கடன் அடைத்து, வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கும் பொழுது கிடைக்கும் நிம்மதி இருக்கே! அதெல்லாம் அனுபவித்து தான் தெரிந்து கொள்ளணும்.

வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கலாம், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நமது நிதியை நிர்வகித்தால், எட்டு வருடத்தில் நீங்கள் ஹவுஸ் ஓனர்.

மொத்தமாக 35 லட்சம் அல்லது 40 லட்சம் சேர்த்து விட்டு தான் வீடு வாங்குவேன் என்று அடம் பிடித்தால், அடுத்த மூன்று வருடத்தில் வீட்டின் விலை மேலும் 10 லட்சம் உயர்ந்து விடும்.

வீட்டு கட்டுமான பொருட்களின் விலை, வேலையாட்கள் கூலி என எல்லாமே உயர்ந்து விடும்.

என்றும் அன்புடன் 

உடுமலை 

சிவக்குமார் V.K

வீட்டு கடன் பிரிவு 

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

அழைப்பு எண் :9944066681..👍⛱.WHATSAPP.. :9944066681🏘

Email:siva19732001@gmail.com🌱

திங்கள், 18 ஜனவரி, 2021

கேள்வி : வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன ?...


என் பதில் :.....நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!
பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:
ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:
இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.
வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.

சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

செவ்வாய், 5 ஜனவரி, 2021

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..(தளி எத்தலப்பர் )

வீரத்தின் விளை நிலம் ...உடுமலையை ஆண்ட மன்னரின் ...புத்தகம் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் கரங்களில் ... உடுமலை


யின் வரலாறு ....மகிழ்ச்சி ....

முழுமையான பாடலும்;

 முழுமையான பாடலும்; 

மெட்ராத்தி,  குடிமங்கலம், கொங்கல்நகரம், கோட்டமங்கலம்,  கல்திட்டை,  திருமூர்த்தி மலை, கொண்டக்கடலை காடு, கொத்துமல்லிகாடு,  பொன்னாலம்மன் சோலை, முள்ளுப்பாடி  அருகே,  தென்னை மரக்காடு,  திருமூர்த்தி அணை,  சஞ்சீவராயன் மலை,   மானுப்பட்டி,   ஜம்புமலை, கல்லாபரம், வயல்வெளி, சூட்டிங் ஸ்பாட்,  தொட்டி அன்னவாய்க்கால்,  பொன்னி வளக்கரை, மதகடிபுதூர் ஓவியங்கள்,  பனைமரங்கள்,  இராமகுளம்,  குமரலிங்கம் பெயர்ப்பலகை,  காசி விஸ்வநாதர் கோயில், நடராஜர் கோயில்,  ரோட்டு மேலிருக்கும் கோயில்,  கொடுமம்  ஆத்துப்பாலத்திலிருந்து  ஒரு சூட்,  கல்லாபுரம் ஆத்துப்பாலத்திலிருந்து ஒரு சூட்,   கண்ணாடிப்புத்தூர் கல்திட்டை,  சோழமாதேவி கோயில்,  கணியூர் சிவன் கட்டாயம்,  காரத்தொழுவு சிவன் கோயில்,  மெட்ராத்தி கல்வட்டம்,  வீரகம்பம், சோமவாரப்பட்டி கோயில் ,உடுமலைப்பேட்டை ரயில் நிலையம், சந்தை,  மக்கள் கூடும் இடங்கள், பிரசண்ட விநாயகர் கோயில், பூர்வீகப் பள்ளிவாசல்,  குட்டை பள்ளிவாசல்,  பழைய பேருந்து நிலையம் பள்ளிவாசல்,  சர்ச், தென்னிந்திய திருச்சபை,  ஆர்.சி.  பழனி ஆண்டவர் மில், திருமூர்த்தி மில்,  போகும் வழியில்  இருக்கும் பஞ்சாலைகள், சிறுவர்கள்  கூட்டம், மாடுகள், ஆடுகள் மந்தை, நீரிறைச்சல், நீரருவி,

செவ்வாய், 22 டிசம்பர், 2020


கேள்வி : நமது ஆவணங்களை டிஜிட்டல் லாக் மூலம் எப்படி பாதுகாப்பது ..?,

ஆதார், பான்கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எப்படி பாதுகாப்பது ?


என் பதில் :..


டிஜிட்டல் லாக்கர் என்பது இந்திய குடிமக்கள் அனைவரம் அவர்களது தகவல்களை, சொந்த விபரங்களை, முக்கிய கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஒன்றாகும். ஆதார் உதவியின் மூலம் இதை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒரு அரசாங்கள் செயல்களுக்கும் குடிமக்களின் ஆதாரத்தை எளிதாக சரி பார்த்துவிட முடியும்.


டிஜிட்டல் லாக்கர் உபயோகப்படுத்த என்ன வேண்டும்?


இந்த டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்த உங்களது ஆதார் என்னும், அலைபேசி என்னும் மட்டுமே போதும்.


இன்றைய காலகட்டத்தில் ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் அவசிய தேவைகளாக மாறியுள்ளது. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் மிக அவசியம்.


டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் (DigiLocker) என்பது ஒரு வகையான மெய்நிகர் லாக்கர் ஆகும். 


டிஜி லாக்கரை உபயோகிப்பது எப்படி?


இதில் கணக்கை தொடக்க, முதலில் digilocker.gov.in அல்லது Digitallocker.gov.in என்ற வலைதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் தளத்தின் வலது பக்கத்தில் சைன் அப் (Sign Up) என்பதைக் கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு ஒரு புதிய பக்கம் தோன்றும். நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு டிஜிலாக்கர் ஒரு OTPஐ அனுப்பும். பிறகு யூஸர் நேம் மற்றும்பாஸ்வேர்டை அமைக்க வேண்டும். பின்னர் டிஜிலாக்கரைப் பயன்படுத்தலாம்.


ஆவணத்தை எவ்வாறு சேமிப்பது?


தளத்தின் இடது பக்கத்தில் Uploaded Documents-க்கு சென்று அப்லோட் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆவணத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுத வேண்டும். பிறகு அப்லோட் என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆவணங்கள் இப்போது டிஜி லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும்.


உங்கள் ஆவணத்தை டிஜிலாக்கரில் சேமித்து வைக்க உங்களின் ஆவணங்களையும் ஸ்கேன் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் ஆவணங்களின் தெளிவான புகைப்படத்தையும் கிளிக் செய்யலாம். அதன் பிறகு நீங்கள் அதை டி.ஜி. லாக்கரில் சேமித்துக் கொள்ளலாம்.


நன்றி ....📚📚✍️✍️🥰🥰


Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

 கேள்வி : வாழ்க்கையில் ஏமாற்றியவர்களை மறப்பது எப்படி?


என் பதில் :...

இருப்பதிலேயே சுலபமான ஒன்று ஏமாற்றியவர்களை மறப்பது தான் என நான் நினைக்கின்றேன்.


என்னை ஏமாளி ஆக்கியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


எனக்கு மனவலியையும் மனதளர்ச்சியும் ஏற்படும் அளவிற்கு ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


என் தேவைக்கு அதிகமானதாக இருந்ததை ஏமாற்றாமல் என் இக்கட்டான சூழ்நிலையை அறிந்தும் ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றியவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


அடுத்தவர்களை அடுத்தடுத்து ஏமாற்றிக்கொண்டே இருப்பவர்களை நான் ஏன் மறக்கக்கூடாது.


நான் மேற்குறிப்பிட்டபடி தன்னைத்தானே கேள்விக்கேட்டு அவர்களின் மீதுள்ள வெறுப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி மறப்பது எளிது.


ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றியதைவிட இந்த வகையான வெறுப்புணரச்சி அதிகப்படியான மன உளைச்சலை நமக்கு ஏற்படுத்திவிடும்.


ஏமாற்றுபவர்களின் திறமை அதாவது மனிதர்களை கையாளும் முறைகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முன்னெச்செரிக்கை வழிகளும் நமக்கு தெரிந்திருந்தால் நாமும் ஏமாந்திருக்க மாட்டோம். அதனால் இந்த ஏமாற்றம் ஒரு படிப்பினை என எடுத்துக்கொண்டு அவர்களை விட்டு சற்று விளகி இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் நலம் சேர்க்கும்.


தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சின்னு இந்த ஏமாற்றத்திற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு நம்முடைய வேலையை பார்ப்பது சிறந்தது.


தன்வினை தன்னை சுடும் என்பார்கள் அதனால் அவர்களின் வினை அவர்களையே சுடும் அதனால் அவர்களை நாம் மறக்கனும்ன்னு அவசியமில்லை அவர்களே நம் பார்வைகளிலிருந்து மறைந்துவிடுவார்கள்.


நம்மை புத்திசாலி என்று தெரிந்ததுமே அல்லது நம்மை ஏமாற்றியதுமே அவர்களாகவே காணாமல் போய்விடுவார்கள்.


நாம் ஏமாறுபவர்களாகவும் இருக்கவேண்டாம்,ஏமாற்றுபவர்களாகவும் இருக்கவேண்டாம்,மறப்பவர்களாக இருப்பதைவிட மன்னிப்பவர்களாகவும் அதனால் கிடைக்கும் அமைதியான மனநிலையில் வாழ்ந்துவிட்டு போகலாம் என நான் நினைக்கின்றேன்.


நன்றி

வியாழன், 17 டிசம்பர், 2020

 கேள்வி : வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?


என் பதில் :.

வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன. 

மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும். 

உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். 

உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது. 

வீட்டுக் கடன்: வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது. முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது? முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது. ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும். 

முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்: கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

சனி, 12 டிசம்பர், 2020

 காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது? ஓர் அறிவியல் விளக்கம்..


உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி உள்பட பல முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் அனைத்து முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அதை மின்சக்தியாக மாற்றப்படுகிறது.


அவ்வாறு தான் காற்றாலைகளும் செயல்படுகின்றன. உலகில் சீனாவில் தான் அதிக காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியா உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது.


காற்றாலை என்பது..


தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.


மின் உற்பத்தியில் காற்றாலையின் அமைப்பு..


மின் உற்பத்திக்கு உருவாக்கப்படும் காற்றாலைகள், 200 லிருந்து 350 அடி உயரத்தில் அமைக்கப்படுகின்றது. காரணம் பிளேடுகள் சுழலும் போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அத்துடன், உயரம் அதிகமாக இருந்தால் காற்றும் இடையூறு இல்லாமல் வந்து சேரும். காற்றாலையில் மூன்று அல்லது இரண்டு பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிளேடுகள் 120 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டிருக்கும். இந்த பிளேடுகள் பைபர் கிளாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றது.


காற்றாலையில் தூண்கள், ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும். இந்த அமைப்பு முழுவதும், ஒவ்வொரு காலநிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பவுடர் கோட்டிங் மூலம் சாயம்  பூசப்பட்டிருக்கும். அதை 20 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட கான்கிரீட்டால் நிலையான அமைப்பை உருவாக்கி நிறுவுகின்றனர். நிறுவும் போது மூன்று துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அமைப்பர். அந்த அமைப்பினுள் ஏணி போன்ற அமைப்பு இருக்கும் அந்த ஏணி போன்ற அமைப்பு தொழில் நுட்ப கோளாறை நிவர்த்தி செய்யும் போது அதன் மேல் ஏறிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த அமைப்பிற்கு மேல் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஜெனரேட்டர் அமைப்பில், மூன்று பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மொத்த அமைப்பும் செய்து முடிக்க மூன்று வாரக்காலம் வரை செலவாகும்.


செயல்முறை..


காற்றின் வேகத்தை பொறுத்து பிளேடுகள் சுழல்கின்றது. இந்த பிளேடுகள் சுழலும் போது அதனுள் அமைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் சுழலும். நேரடியாக ஜெனரேட்டரால் பிளேடின்

வேகத்தில் மின் உற்பத்தி செய்ய இயலாது. எனவே அத்துடன் கியர் பாக்ஸ் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அந்த பிளேடும் ஜெனரேட்டரும் 1:90 என்ற விகித்தில் செயல்படும். அதாவது, பிளேடு 1 முறை சுற்றும் போது ஜெனரேட்டர் 90 முறை சுழல்கிறது. அவ்வாறு அந்த ஜெனரேட்டர் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.


அந்த மின் சக்தியை, காற்றாலையின் கீழே கொண்டு வரப்பட்டு கீழே ஒரு ஸ்டெப்பப் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்டெப்பப் மின்சக்தியாக மாற்றி, நமது பயன்பாட்டிற்கு கொண்டு

செல்லலாம். காற்றாலை இவ்வாறு செயல்பட்டாலும், அதில் ஒரு சிறிய சிக்கலும் உள்ளது. காரணம் காற்று எப்போதும் ஒரே பக்கத்தில் வீசுவதில்லை. அதற்கும் ஒரு அமைப்பு காற்றாலையினுள் அமைந்துள்ளது.


டர்பைனின் பின்புறம் velocity sensor பொருத்தப்பட்டிருக்கும். அது காற்றின் திசை அறிந்து yawing machine மூலம் டர்பேனின் திசையை மாற்றுகின்றது. அதேபோல் காற்றின்

வேகத்தை பொருத்தும் அதன் பிளேடின் வேகத்தையும் கட்டுப்படுத்தி சமநிலையில் சுழல செய்கின்றது. இத்தகைய அமைப்பிலும், சில வேளைகளில் இயற்கை சீற்றத்தால் காற்றாடி ஆபத்தை சந்திக்கலாம். எனவே இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் காற்றாடி இயங்காமல் இருக்க உள்ளே ஒரு பிரேக் அமைப்பும் உள்ளது.


இந்தியாவின் முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்..


இந்தியா காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அதில் 29% மின் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் உள்ள முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்.


* முப்பந்தல் கன்னியாகுமரி,உடுமலைப்பேட்டை ... தமிழ்நாடு

* ஜெய்சால்மர் விண்ட் பார்க், ராஜஸ்தான்

* பிரம்மன்வெல் காற்றாலை, மகாராஷ்டிரா

* தமன்ஜோடி விண்ட் ஃபார்ம், ஒடிசா

* துப்பதஹள்ளி காற்றாலை, கர்நாடகா


இந்தியா போன்ற பல நாடுகளில் மின்சக்தியை பெற காற்றாலை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. அதில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 அமுதே! தமிழே! அழகிய மொழியே எனதுயிரே.....என்ற பாடல் ஆசிரியர் யார் ..


பதில் :..தாமரைக்கோன் (Aravind Raja), RKMVC கல்லூரி, மயிலாப்பூர்.- இக்கேள்வியைக் கேட்ட ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இதற்கு தமிழரின் வரலாற்றையும், தமிழிசையின் வரலாற்றையும் குறிப்பிடுவது இன்றியமையாதது. இசையை வளர்த்த சங்க இலக்கியங்கள்: தமிழ் மொழி இலக்கியங்களுக்கு அடிப்படையாக விளங்ககூடியவை, நாற்பத்து ஒன்று செவ்வியல் நூல்கள். அவை : தொல்காப்பியம் (1) பத்துப்பாட்டு (10) எட்டுத்தொகை (8) பதினெண்கீழ்க்கணக்கு (18) சிலப்பதிகாரம் (1) மணிமேகலை (1) முத்தொள்ளாயிரம் (1) இறையனார் அகப்பொருள் உரை (1) ஆக, மொத்தம் நாற்பத்து ஒன்று. தமிழரின் இசை மற்றும் நாட்டியக் கலை பற்றி கூறும் நூல் சிலப்பதிகாரம் . சங்க இலக்கியங்களிலேயே, பண்ணோடு பாடக் கூடிய ஒரே இலக்கியம், பரிபாடல் ஆகும். தமிழிசையைப் பாதுகாத்த காரைக்கால் அம்மையார் : சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்களின் இருண்டகாலம் என்று சொல்லப்படும் களப்பிரர்களின் ஆட்சிக் காலம் வந்தது. அக்காலத்தின் துவக்கத்தில் காரைக்கால் அம்மையார் தோன்றி தமிழரின் இசையையும், நூல்களையும் மீட்க, பண்ணோடு கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடினார். இவ்வாறே, சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் கிடைத்தது. ஆதலால், காரைக்கால் அம்மையார், தமிழிசையின் தாய் என்று போற்றப்பட்டார். ஆதலால் தான், அவர் பாடிய முதல் பதிகத்தை, மூத்த திருப்பதிகம் என்று அழைத்தனர். அவர் தமிழிசையை வளர்த்தார் என்பதற்கு அவருடைய இந்த பாடலே சான்று. துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம் உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து) அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. இப்பாடலில் : துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை (குரல்) என்ற ஏழு பதங்களை (சப்தச் சுரம்) குறிப்பிட்டுள்ளார். இஃது, பின்வரும் சம்பந்தரின் தேவார பாடலின் மூலமும் நன்கு புலப்படும். பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. இப்பாடல்களின் மூலம், கர்நாடக இசையானது தமிழிசையை அடிப்படையாகக் கொண்டது என்பது திண்ணம். மேலும், சச்சரி கொக்கரை தக்கை தகுணிச்சரம் தந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் குடமுழா தமருகம் மொந்தை போன்ற இசைக்கருவிகளைக் குறிப்பிட்டதன் மூலமும் இவர் பண்ணோடு கூடிய தமிழை வளர்த்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும், சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் ஒரு பெண்ணால் கிடைத்தது என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று ! சங்க இலக்கியங்களைப் பார்த்து வருந்திய அம்மையார் : தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வரலாற்றையும் மற்றும் பல அரிய செய்திகளைத் தரும் சங்க இலக்கியங்களில், பெரும்பாலான பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமையைப் பார்த்தும், பல பாடல்கள் சிதைவுற்றதைப் பார்த்தும் வருந்தினார் காரைக்கால் அம்மையார். ஆதலால் இனி வரும் இலக்கியங்களாவது பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும், எழுதியவர் யார் ? எங்கு எழுதினார் ? என்பதை அறியும் வகையிலும் ஒரு உத்தியைக் கையாண்டார். அதுவே, திருக்கடைக்காப்பு . ஒரு பதிகத்தைப் யார், எங்கு, எப்போது பாடினார் என்பதை அப்பதிகத்தின் இறுதியில் பாடலின் வடிவிலேயே பாடப்படுவது தான், திருக்கடைக்காப்பு . இதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும். இவரைப் பின்பற்றியே தேவார மூவரும், பிற நாயன்மார்களும், ஆழ்வார்களும் இவ்வுத்தியைக் கையாண்டனர். பல்லவர்களாலும், களப்பிரர்களாலும் வந்த வினை: களப்பிரர்கள் ஆட்சியிலும், பின்னர் வந்த பல்லவர்கள் ஆட்சியிலும் தமிழ் தாழ்வுற்று, வடமொழி பெரும்பான்மை பெற்றது. இதற்கு பல்லவர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகளாக இருப்பதே சான்று. ஆகையால், தமிழையும் சைவத்தையும் தமிழிசையையும் மீண்டும் புத்துயிர்ப் பெற திருஞானசம்பந்தர் பிறந்தார். இது சேக்கிழாரின் பின்வரும் பாடலின் மூலம் விளங்கும். திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற, மிசை உலகும் பிறலகும் மேதினியே தனி வெல்ல, அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல, இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக. தேவார மூவரால் மீண்டும் உயிர்ப் பெற்ற தமிழிசை: காரைக்கால் அம்மையார் தமிழிசைக்கு வித்திட்டவராயினும், அதனை பல மடங்கு முன்னோக்கி எடுத்துச் சென்றவர் திருஞானசம்பந்தர். ஆயினும், அம்மையார் சென்ற வழியிலேயே சம்பந்தரும் சென்றார். அம்மையார் தன்னுடைய முதல் பதிகத்தை நட்டபாடை (இன்றைய கம்பீரநாட்டை இராகம்) பண்ணில் பாடினார். சம்பந்தரும் தன்னுடைய முதல் பதிகத்தை இப்பண்ணிலேயே பாடினார். அம்மையார் உருவாக்கிய திருக்கடைக்காப்பு உத்தியை முதன்முதலில் பயன்படுத்தியவரும் சம்பந்தரே ! இசைக்கும், தமிழுக்கும் ஏது சாதி என்றுக் கூறி சாதிய கட்டமைப்பைத் தகர்த்தவர் திருஞானசம்பந்தர் : சம்பந்தர் ஒவ்வொரு தலத்துக்கும் செல்லுகையில், அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மற்றும் அவரது மனைவி மதங்கசூளாமணியாரும் உடன் செல்வர். ஏனெனில், யாழ்ப்பாணர் யாழ் வாசிப்பதிலும். சூளாமணியார் தாளம் மற்றும் பண் அமைப்பதிலும் வல்லவர்கள். தான் எங்கு சென்றாலும் தவறாமல் இவ்விருவரையும் உடன் அழைத்து செல்வார் சம்பந்தர். அன்று, பாணர்கள் பிரமாணர்களாலும் மற்றும் பிற உயர் சாதியினராலும் "தாழ்சாதி மக்கள்" என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணால் தேவார பண்களை அறிவித்த பெருமான் : தில்லைக் கோவிலில் நம்பியாண்டர் நம்பியின் துணைக் கொண்டு தேவார சுவடிகளை மீட்டார் இராசராச சோழன். தேவாரம் மற்றும் திருமுறைகளைப் பகுக்கும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பிகளிடம் ஒப்படைத்தான் மன்னன். தேவாரம் கிடைத்த நிலையில், தேவார பாடல்கள் எந்த பண்களால் பாடப்பட்டவை என்று நம்பியாண்டார் நம்பி குழம்பினார், எண்ணி வருந்தினார். நம்பியாண்டார் நம்பி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊரான எருக்கத்தம்புலியூர் சென்றார். அங்கு இருக்கும் ஈசனிடம் தேவார பண்களைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். "பாணன் வழி வந்த வல்லி ஒருத்திக்குப் பண்களை அறிவித்துள்ளோம். பெற்றுக் கொள்" , என்று அசரீரி ஒலிக்கவே, நம்பியும் அப்பெண்ணைப் பார்த்து, மூவர் பாடிய முறையிலேயே அப்படியே பாடப்பெற்று, அதற்கான கட்டளைகளையும் வகுத்தார். இவை அனைத்தும் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறை கண்ட புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவாரத்தில் பாடப்பட்டுள்ள தமிழ்ப் பண்களுக்கு இணையான கர்நாடக இராகங்கள் : தமிழ்ப் பண்கள் - கர்நாடக இராகங்கள் நட்டபாடை - கம்பீரநாட்டை கொல்லி - நவரோஸ் இந்தளம் - மாயமாளவகௌளை குறிஞ்சி - அரிகாம்போதி செந்துருத்தி - மத்தியமாவதி யாழ்மூரி - அடாணா (அ) நீலாம்பரி சீகாமரம் - நாதநாமகிரியை நட்டராகம் - பந்துவராளி தக்கராகம் - காம்போதி பழந்தக்கராகம் - சுத்தசாவேரி பழம்பஞ்சுரம் - சங்கராபரணம் தக்கேசி - காம்போதி செவ்வழி - யதுகாம்போதி பியந்தை காந்தாரம் - நவரோஸ் காந்தாரம் - நவரோஸ் காந்தார பஞ்சமம் - கேதார கெளளை கொல்லிக்கௌவாணம் - நவரோஸ் கெளசிகம் - பைரவி பஞ்சமம் - அகிரி சாதாரி - பந்துவாராளி புறநீர்மை - பூபாளம் அந்தாளிக்குறிஞ்சி - சாமா மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி (அ) அமிர்தவர்ஷினி வியாழக் குறிஞ்சி - சௌராஷ்டிரம் முடிவு : தமிழ் கற்ற நாத்திகர்களும், தேவாரத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர். ஏனெனில், பக்திக்கு ஆற்றிய பங்கை விட, இந்நூல் தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிய பங்கு அளப்பரியது. காரைக்கால் அம்மையார் தமிழ் இசை மீண்டும் புத்துயிர் பெற வித்தாக இருந்தார் எனில், தேவார மூவரே அதனை கிளைக்கச் செய்தனர். தேவாரம் தமிழிசைக்கு ஆதாரம் என்று சொல்வதை விட, அதனை கிளைக்கச் செய்தது என்று கொள்வதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று, தமிழிசையைப் புத்துயிர் பெற செய்த காரைக்கால் அம்மையார், ஒரு பெண் ! தேவார பண்கள் மீண்டும் அமைய காரணமாக இருந்தவர், ஒரு பெண் ! இன்று இக்கேள்வியைத் தொடுத்தவரும் ஒரு பெண் ! இறைவனின் அருளை என்னவென்று சொல்வது ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் இசை !

 திருமணம்.....

 அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடுத்த கட்ட நகர்வைத்தருவது ,ஆனால் எங்களது அறக்கட்டளையின் துணைத்தலைவருக்கு தம் சமூகப்பணிக்கும் அரசியல் பணிக்கும் மாற்றத்தைக் கொடுத்தது.


அரசியலுக்காக சமூகப் பணியாற்றும்   இம்மண்ணில் சமூகத்திற்காக அரசியல் களம் கண்டு....  ஆதாயமின்றி இன்றளவும் பாடாற்றும் உடுமலை வரலாற்று செல்வத்தின் அரசர்,

தமிழுக்காகத் தலை கொடுத்த குமணன் மண்ணில் மொழிக்காகப் போராடி சிறை கண்ட  மொழிப்போர் ஈகி வெ.காளியப்பனின் தலைமகனுக்கு அடுத்த மகன்,

மண்ணின் மைந்தன் சாதிக்பாட்சாவை  சரியாக இனம் கண்டு மனிதப்புனிதர் எனும் பட்டத்தைத் தந்திட்ட மனிதப் பனிதரின் அன்பில் விழைந்த பாசமலர்,

உடுமலை வரலாற்றில் உயிர்ப்பான நாயகருக்கு உரிமையுடன் கூறும்

Suguna Selvaraj

 and 

VK Selvaraj..அவர்களுக்கு 

.மண நாள் வாழ்த்து வாழ்க வாழ்வாங்கு வாழ்க...

திங்கள், 7 டிசம்பர், 2020

உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் ..

 உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம்  வல்லகொண்டம்மன் ..


திருமலை நாயக்கர் காலத்திற்க்கு முற்ப்பட்ட நான்கு ஜமீன்தார்களின் குலதெய்வமாக விளங்கிய கோட்டமங்களம் பாலமண்ணவகையரா வல்லகுண்டம்மாள் கோவில் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது...

உள்ளே அரிய பல சிலைகள் காணப்படுகிறது ...


ஒரே கல்லில் ஏழு கண்ணிமார் சிலைகளை பார்த்திருப்பீர்...

ஆனால் இங்கு கருவரையில் ஏழு கண்ணிதெய்வங்களின் சிலைகள் தனித்தனியாக இரண்டடி உயரத்தில் அருமையாக வடித்துள்ளனர் ...


 லிங்கம் நந்தி மற்றும் தொட்டால் (புல்லாங்குலல்) வாசித்தபடி முண்ணோர் சிலைகள் 


இடும்பன் காவடி சிலைகள்..


 முண்ணோர்களின் வேட்டைக்கு செல்லும் சிலைகள் ...

 அதுபோக கூம்பு வடிவில் ஒரு சிலை அமைந்திருந்தன அது என்ன என்பது புல படவில்லை..


இவையனைத்தும் கருவரையில் உள்ளது 


இராஜகம்பளத்தாரின் பாரம்பரியத்தின்படி அந்த கருவறை அமைந்திருந்தன என்பதை பார்தவுடன் எனக்கு தெளிவாய்ன...


நைரிவாரு மட்டும் இங்கு வழிபடுகின்றனர்

மற்ற குடி பாடுகள் பிடிமண் எடுத்து சென்று அவர்களின் ஊரு அருகிலே ஆவகணம் செய்து வழிபடுகின்றனர்...

பாலவார்களின் தாய்கோவிலாக செயல் படுகின்றது

கெங்குசி பாலமண்ண வகையராக்கள் இங்கிருந்து கிழக்கு நோக்கி  பிடிமண் எடுத்து செல்லும் போது மால மேட்டில்  பல்லகுடும்பன்  துணை காக்கா அமர்ந்துள்ளார்

என்பது என் கோடாங்கி மூலை


இக்கோவிலில் நாகம் ஒன்று காவல் காக்கிறது என்பதை சொல்ல கடமைபட்டுள்ளேன்...

(புதையளுக்கா காவல)்?


இதை நானே உணர்ந்தேன் ..


இங்கு ஏதோ ஒரு சக்தி உள்ளது ..

அதை சிலர் அடக்குகின்றணர்

அதை அகம விதிகளில் பூஜை புனஸ்காரங்கள் செய்கின்றபோது

பாசிட்டீவ் சக்திகள் வெளிப்படும் என்பது உண்மை....

பதிவு :..வைகை சாரல்👍


குறிப்பு : இந்த ஆண்டு ..கடந்த தீபா திருவிழா அன்று கிழக்கில் இருந்து அதிகம் புது சொந்தங்கள் வருகை தந்தனர் ...எப்பொடியோ ..உடுமலைப்பேட்டை ..கோட்டமங்கலம்  வல்லகொண்டம்மன் ..ஆதி மண்ணின்  குலதெய்வ கோயிலை கண்டு பிடித்து விட்டார்கள் ...மிக்க மகிழ்ச்சி ..




புதன், 2 டிசம்பர், 2020

கேள்வி : கோவை நகரம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்தது போன்று மதுரை ஏன் அடையவில்லை?


என் பதில் :..


கொங்கு மண்டலத்தின் காலச்சாரமே அதுதான்.


உழைப்பு, உண்மை, உயர்வு.


நாங்கள் ஆயிரம் வருசமாக ஒடுக்கப்பட்டவர்கள், எங்கள் நிலங்களை மன்னர்கள் பிடுங்கி கொண்டனர் என ஒப்பாரி வைத்து சோம்பேறித்தனமாக தூங்காமல் உழைப்பில் நம்பிக்கை வைத்து தொழிலில் நேர்மையை பின்பற்றி தான் முன்னேறியதோடு அல்லாமல் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து முன்னேற்றி விட்டு நாட்டுக்கு வருமான வரியையும் சரியான முறையில் செலுத்தி இன்று தமிழகத்தின் உற்பத்தி துறையில் 60% க்கும் மேல் கையில் வைத்திருப்பது கோவையை தலைமையிடமாக கொண்ட கொங்கு மண்டலம்தான்.


ஜிடி நாயுடு ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியை நா. மகாலிங்கம் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடர்ந்ததன் விளைவு இயந்திர உற்பத்தி, நூல் தொழிற்சாலை, ஆடை ஏற்றுமதி, கல்வி மற்றும் மருத்துவமனை என தமிழகத்தின் பின்னோக்கி தள்ளும் வண்ணம் கோவை உயர்ந்து நிற்கிறது.


கல்வி நிறுவனம் என்று பார்த்தால் PSG, ராமகிருஷ்ணா, குமரகுரு, கோவை வேளாண் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி என கல்வி துறையில் முன்னணியில் உள்ளது.


மருத்துவ துறையில் அரசு மருத்துவமனை தொடங்கி, கோவை மெடிக்கல், psg மருத்துவமனை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கேஜி மருத்துவமனை, ராமகிருஷ்ணா மருத்துவமனை, ராயல் கேர் என உலகத்தரம் வாய்ந்த பல மருத்துவமனைகள் உள்ளது.


மருத்துவ சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டுவதில் கோவை தான் இந்தியாவிலேயே முதலிடம்.


தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரம், சென்னைக்கு அடுத்ததாகவும் இந்த நகரம் அமைந்துள்ளது. நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட ஐடி பூங்காக்கள் தொடங்குவதன் மூலம் இந்நகரில் பி.பி.ஓ தொழிற்துறையினர் பெரிதும் வளர்ந்துள்ளனர். உலக அவுட்சோர்சிங் நகரங்களில் இது ஒரு இடத்தைப் பிடித்தது. விப்ரோ, ஃபோர்டு, ராபர்ட் போஷ் ஜிபிஎச், ஐபிஎம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டாட்டா எக்ஸ்சிஸி, டெல், சிஎஸ்ஸ் கார்ப் மற்றும் கேஜிஐஎஸ்எல் போன்ற நகரங்கள் இந்நிறுவனத்தில் உள்ளன.


கோயம்புத்தூர் கார் கூறு தொழிலில் மிகவும் நம்பகமான அவுட்சோர்சிங் இடங்களில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது.


ஆசியாவின் மின் மோட்டார் நகரமாக கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் நிறைய சிறிய அளவிலான பொறியியல் நிறுவனங்கள் உள்ளன.


இங்கு சாதி சண்டைகள் இல்லை, தமிழன் தமிழன் என போராடும் கூட்டமும் இல்லை, பல தொழிற்சாலைகள் இருந்தாலும் கேரளாவை போல கொடி பிடித்து ஸ்டிரைக் செய்யும் அட்டைப்பூச்சி சங்கங்களும் இல்லை என்பதை இங்கு வந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரியும்.


அதே போல இங்கு யாராக இருந்தாலும் வாங்க போங்க என மரியாதையுடன்தான் அழைப்பார்கள்.அதே போல இங்கு ரவுடித்தனம் என்பதே மருந்துக்கு கூட கிடையாது.


மனித குலத்தை நாசமாக்கும் மொழிவெறி இனவெறியை தவிர்த்து அனைத்து தரப்பட்ட மனிதர்களையும் சகோதரர்களை போல அரவணைத்து செல்லும் தர்ம பூமி இது.


அதே போல நில அபகரிப்பு கட்டப் பஞ்சாயத்து எல்லாம் இங்கு அறவே இல்லை.


இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றால் அது கோவை தான்.


ஆக சட்டம் ஒழுங்கு இங்கு மிகவும் சரியாக உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பதில் முன்னணியில் கோவை தான்


இந்த கட்டுப்பாடுமும் ஒழுக்கமும்தான் கோவை யின் வளர்ச்சிக்கு காரணம்.


இது முழுக்க முழுக்க இங்குள்ள மக்களின் உழைப்பால் விளைந்த பலன் இது.


இந்த வெற்றி இட ஒதுக்கீட்டாலோ, சமூக நீதியாலோ அரசாங்க ஸ்காலர்ஷிப்பாலோ இன்னும் பிற சலுகைகளாலோ வந்தது அல்ல முழுக்க முழுக்க உழைப்பு, திறமை மற்றும் நேர்மையால் மட்டுமே பெற்ற வெற்றி.


இதை சில கட்சிகள் தங்களின் ஆட்சிதான் காரணம் என கோவை மக்களின் உழைப்பையும் வெற்றியையும் திருட பார்க்கின்றன.


இந்த அரசியல்வாதிகளின் நிர்வாக திறமின்மையால் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சினையால் கோவை சந்தித்த பிரச்சனை இழப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. கோவையின் இருண்ட காலம் அது.


உண்மையில் எங்களால்தான் தமிழகம் இன்று முன்னணியில் உள்ளது என மேடைக்கு மேடை சவடால் விடும் கட்சிகளுக்கு ஒரேயொரு கோரிக்கை முடிந்தால் உங்களின் ஆட்சி நிர்வாக திறமையால் ஒரு ராமநாதபுரத்தையோ, திருவாரூரையோ இன்னொரு கோவையாக மாற்றி காட்டுங்களேன் பார்ப்போம்.


பிகு :- நான் கோவை நகரின் பெருமை பற்றி பேசியதற்கு சிலருக்கு ஏன் எரிச்சல் என புரியவில்லை. நான் மற்ற ஊர்களை இழிவுபடுத்த வில்லையே இதில். முடிந்தால் உங்கள் ஊரின் பெருமை பற்றி எழுதுங்கள் அது பிரயோஜனப்படும். அதை விடுத்து உங்கள் மொழி வெறி, இனவெறியை இந்த பதிலில் காட்டும் உங்களை கண்டால் பரிதாபம் தன் வருகிறது.