புதன், 7 ஜனவரி, 2026

உடுமலை.....கிராமங்களில் சலகெருது ஆட்டம் துவக்கம்

 கிராமிய கலைகளை  மண் மணம் மாறாமல் 

உடுமலை.....கிராமங்களில் சலகெருது ஆட்டம் துவக்கம் - பொங்கலுக்கு தயாராகும் மக்கள்

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், மார்கழி மாதம் துவக்கத்தையொட்டி சலகெருது ஆட்டம் துவங்கியுள்ளன. அவ்வாறு, பெரிய பாப்பனூத்து கிராமத்தில் நடந்த சலகெருது ஆட்டம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு கிராமத்தின் வளம், அங்குள்ள கால்நடை வளத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன், கால்நடை உருவில் வரம் அளிப்பதாக கருதும் கிராம மக்கள், பாரம்பரிய கலையையும் போற்றி பாதுகாக்கின்றனர்.

அவ்வாறு பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் காளைக் கன்றுகள், இறைவனுக்கு சொந்தமானது என கருதப்படுகிறது. ஆகையால், இந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகிறது.

அதனை தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றை சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர்.

ஒவ்வொரு கிராமத்தினரும், தங்கள் பகுதிக்கு ஒரு சலங்கை மாட்டை தேர்ந்தெடுத்து, அவற்றை பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர்.

அந்த மாடுகளுக்கு 'சலகெருது' என பெயரிட்டு, ஆல்கொண்டமாலனுக்கு உரியதாக போற்றப்படுவதால், இந்த எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட அணிவிக்கப்படுவது கிடையாது. இந்த கன்றுகள், கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும். எருதுகளின் பராமரிப்பை மக்களே ஏற்பர்.

மார்கழி மாத இரவுகளில், ஊர் பொது இடத்தில், இசைக்கு தகுந்தாற்போல் ஆடி செல்ல, உறுமி இசை கலைஞர் தலைமையில், தேவராட்ட குழுவினரால் இந்த கன்றுகள் தயார்படுத்தப்பட்டும் வருகிறது.

ஆட்டக்காரர் தனது கைகளில் இரண்டு நீளமான குச்சிகளை கையில் ஏந்தி, உறுமி இசைக்கேற்ப காளையின் முன்பு ஆடிச் செல்வர். ஆட்டக்காரரின் ஆட்டத்துக்கு ஏற்றவாறு, தனது தலையை அசைத்தவாறு காளைகள் அவர்களை பின்தொடரும்.

அவ்வாறு, ஆட்டக்காரரின் அசைவுகளுக்கு பின் தொடரும் சலகெருது, ஆட்டத்தில், சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ஆட்டக்காரரை முட்டுவது போல, ஆவேசமாக பாயும்.

அப்போது, குச்சிகளை தரையில் ஊன்றி, தடுப்பு போல ஏற்படுத்தி, ஆட்டக்காரர் எருதின் தாக்குதலில் இருந்து தப்பிப்பார்.

இவ்வாறு, மார்கழி மாதம் முழுவதும், தங்கள் கிராமங்களில் சலகெருது ஆட்டத்தை ஆடும் மக்கள், தை பிறந்ததும், சிறப்பு பொங்கலை எருதுக்காக வைத்து வழிபடுவர்.

பின்னர், கால்நடைகளின் தெய்வமாக கருதப்படும் ஆல்கொண்டமால் கோவிலுக்கு, அவை அழைத்து செல்லப்படுகின்றன.

அங்கு, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, அனைத்து சலகெருதுகளும் வரவழைக்கப்பட்டு, திருவிழா நடக்கும்.

பொங்கல் திருவிழா முடிந்ததும், நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டு, சலகெருது பால் எடுக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். கிராம வள மேம்பாட்டுக்கு காரணமாக திகழும் சலகெருதை உடுமலை பகுதி கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தற்போது,கே. வல்லக்கொண்டபுரம் ஜே என் பாளையம், பி என் சாலையூர், விளா மரத்து பட்டி, சாலையூர், கொடிங்கியம், உடுக்கம்பாளையம் என பல்வேறு கிராமங்களில், இந்த பாரம்பரியம் தொடர்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், பெரிய பாப்பநுத்து நடந்த சலகெருது ஆட்டம் கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

காணும் பொங்கலையொட்டி,சோமவாரபட்டி மால கோவிலுக்கு சலகெருது அழைத்துச் செல்லப்பட இருப்பதால், அதற்கான ஆயத்தப்பணிகளும் துவங்கியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக