கார்த்திகை மழை கண்டு கண் விழிக்கும் பெருமைமிக்கது செங்காந்தள் மலர்.
இது ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் உள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மழைக் காலத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கும் கார்த்திகை பூ செங்காந்தள். இம்மலர் குறித்து தமிழ் இலக்கியங்கள் சிறப்பாகப் பேசுகின்றன.
தமிழகத்தின் மாநில மலராகவும், தமிழ் கடவுள் முருகபெருமான் பிறந்த மாதத்தில் இந்த மலர் பூப்பதனால் முருகக் கடவுளுக்குப் பிடித்த மலர் என்ற சிறப்பினையும்
இது பெறுகிறது. தமிழ் நிலத்தையும், தமிழர்தம் வீரத்தையும் குறியீடாகக் கொள்ளப்படுகின்ற
கார்த்திகை பூக்களை போருக்குச் செல்லும்போது பண்டைய தமிழ் மன்னர்கள் மாலையாக அணிந்து கொண்டார்கள் என்கிறது சங்க நூல்கள். சிலப்பதிகாரத்தில் இந்தப் பூவின் இதழ்களை பெண்களின் அழகிய விரல்களோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருப்பார்கள்.
தீச்சுடர் போல் காட்சி அளிக்கும் செங்காந்தள்
மலர் செடியின் வேர் பகுதியை கண் வலி கிழங்கு, கலப்பை, வெண்தோன்றி, கார்த்திகை கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர் செடியின் அனைத்து பாகங்களிலும் ‘கோல்ச்சிசின்' என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகிறது.
இதன் வேர் நச்சுத்தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம் மேல் பட்டால் சருமத்தில் அரிப்பு உண்டாகும். இந்தக் கிழங்கில் உள்ள ‘கோல்ச்சிசினும்', 'சூப்பர்பைனும்' மருத்துவக் கூறுகளாகும்.
இந்தச் செடியின் கிழங்கில் இருந்து புதிய கொடிகள் கிளை விட்டுப் படரும். இலைகளின் நுனி நீண்டும், சுருட்டும் பற்று கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றை பற்றிப் பிடித்து வளரக்கூடியது. இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடனும், பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம் மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் வெண்காந்தள், செங்காந்தள் என்று இரு வேறு மலர்களாக வர்ணிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக